பாட்கேயின் ரெயில் 16ஆம் தேதி விடியற்காலை 2 மணியளவில் பூனா சென்றடைந்தது. இரும்பு தடுப்புக்களுக்கிடையே நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரின் கைகளில் ஒரு இரண்டு ரூபாய் நோட்டை ரகசியமாகத் திணித்து விட்டு பாட்கேயும், சங்கர் கிஷ்டய்யாவும் சுதந்திரமாக வெளியேறினார்கள்.
சற்றே வெளிச்சம் தெரியத் தொடங்கியதும் கடையின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த எல்லா வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் சங்கர் கிஷ்டய்யா கொண்டு வந்தார். அவற்றை பாட்கேயும் கிஷ்டய்யாவும் இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டினர்.
அதன் பிறகு நண்பகல் வரை பாட்கே தூங்கப் போய் விட்டார். அதன் பிறகு இரண்டு சாக்கு மூட்டைகளை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கலானார்.
நம்பகமான ஆளாக யாருமே தோன்றவில்லை அவருக்கு. அதை பத்திரமாகப் பாதுகாக்கக் கூடிய ஆளாக இருக்க வேண்டும்… அதை வைத்துக் கொண்டு பின்னர் ப்ளாக்மெயில் செய்யாத ஆளாக இருக்க வேண்டும்…
இரவு 7 மணி வரை அப்படி ஒருவர் யோசனைக்கே வரவில்லை. அதன் பிறகு….
கதவிலக்கம் 148 நாராயண் பேத்தில் இருந்த கண்பத் கராத் என்பவரின் வீட்டிற்குச் சென்றார். கராத் பம்பாய் சட்டமன்றத்திற்கு,காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்,மிகுந்த செல்வாக்குமிக்க நபராக விளங்கினார். பின்னாளில், காந்தி கொலை வழக்கின் போது வாக்குமூலம் அளித்த கராத் கூறினார் :
பாட்கே அந்த மூட்டைகளை கொண்டு வந்த சமயம்,தான் மலஜலம் கழிப்பதற்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்ததாகவும், ஏதோ ஹைதராபாத் காங்கிரஸ் கட்சிக்காக,அந்த மூட்டைகளை கொண்டு வந்திருப்பதாக பாட்கே முணுமுணுத்தது மட்டுமே தனக்குக் கேட்டதாக கூறினார்.
அது மட்டுமின்றி.. ஒரு 3 அல்லது 4 நிமிடங்கள் கழித்து,கராத் திரும்பி வந்த போது,பாட்கே சென்று விட்டிருந்தார்.
பின்னாளில்…… போலீஸ் விசாரணையின் போது,கராத்….. தனக்கு அந்த மூட்டைகளில் என்ன இருந்தது என்றே தெரியாது என்று தெரிவித்த போது,அவரிடம் மேலும் கேள்விகள் கேட்காமல் போலீசார் அவர் கூறியதை ஏனோ அப்படியே ஏற்றுக் கொண்டனர்.
கராத் பாட்கே பைகளை விட்டுச் சென்ற பிறகு,அவற்றை தன்னிடம் வைத்துக் கொள்ள விரும்பாமல், அவர் சென்ற ஒரு மணி நேரத்திற்கெல்லாம் இரண்டு கட்சி ஊழியர்களை வரவழைத்து,இருவரிடமும் ஒவ்வொரு பையைக் கொடுத்து அதனை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறி அனுப்பி விட்டார்.
பாட்கே இரவு எட்டு மணியளவில் தன் கடைக்குத் திரும்பினார். நாதுராம் பாட்கேயைக் காண இரண்டு முறை கடைக்கு வந்ததாக ,சங்கர் கிஷ்டய்யா அவரிடம் தெரிவித்தார்.
அது தவிர,தன்னுடைய அலுவலகத்திலேயே பாட்கேயிற்காக காத்திருந்தார் நாதுராம் கோட்ஸே. நாதுராம்,பம்பாயிலிருந்து நண்பகலுக்குப் பிறகு டெக்கான் குயின் விரைவு ரயிலில் புறப்பட்டு,கிர்கியில் இறங்கி தன்னுடைய தம்பி கோபால் கோட்ஸேயைக் காணச் சென்றிருந்தார்.
ஜனவரி மாதம் 17ந் தேதி சனிக்கிழமையன்றிலிருந்து,தம்பிக்கு வேலை விடுப்பு கிடைப்பதை அறிந்து நிம்மதியடைந்தார். கோபால் கோட்ஸே,வெள்ளிக்கிழமையன்று மாலையில்,தன் கிராமமான உக்ஸனுக்குச் சென்று அங்கு தான் புதைத்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்துக் கொண்டு,அங்கிருந்து எந்த ரெயில் விரைவாக பம்பாய் புறப்படுகிறதோ அதில் பம்பாயிற்கு வந்து சேருவதாக நாதுராமிடம் கூறினார்.
அப்படி பம்பாய் வந்து சேர்ந்த பிறகு, பம்பாயிலிருந்து நண்பகலுக்குப் பிறகு டெல்லிக்குப் புறப்படும் பஞ்சாப் மெயிலில் டெல்லி வந்து சேருவதாக தெரிவித்தார்.
நாதுராமும்,ஆப்தேயும்,டெல்லி ரயில் நிலையத்தில் 18ந் தேதி மாலையில் கோபால் கோட்ஸேயை சந்திப்பதாக ஏற்பாடானது.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்