இரு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வியாழன் இன்று விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டார்.
முன்னதாக, விளாதிவோஸ்டாக்கில் நடந்த, இந்தியா – ரஷ்யா இடையேயான, 20வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்ற மோடி, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார்.
கிழக்கு பொருளாதார மாநாட்டில் செப்.5 ம் தேதி இன்று மோடி பங்கேற்றார். இதன் மூலம், ரஷ்யாவின் கிழக்கு பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் மோடி.
முன்னதாக, ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் மற்றும் மலேசியப் பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அணு சக்தி தொடர்பு முனையங்கள், தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.
விளாடிவோஸ்டக் நகரில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார மண்டல மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.