இலங்கைச் சிறைகளில் உள்ள 51 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 51 பேர் அடைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரும் விரைவாக விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பதையும், இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பதையும் ஓ.பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், வெளியாகியுள்ள இத்தகவல் ஏமாற்றத்தை அளிப்பதாக ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களின் படகுகளை புதுப்பித்து, அவற்றை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம், படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.