அம்மன் கோவில் வளர்ச்சிக்காக 10 கோடி ரூபாய் கொடுங்கள்… அப்படியே மசூதிக்கு ரூ.3 கோடி கொடுங்கள் என்று தெலங்காணா முதல்வரிடம் அக்பருதீன் ஒவைசி கோரிக்கை மனுவை அளித்திருக்கிறார்.
ஹைதராபாத் பழைய பஸ்தியில் உள்ள லால்தர்வாஜா என்ற இடத்தில் அமைந்துள்ள சிம்மவாகினி மகாகாளி ஆலயத்தில் சீரமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று எம்ஐஎம் கட்சி எம்எல்ஏ அக்பருதீன் ஒவைசி தெலங்காணா முதலமைச்சர் சந்திரசேகர ராவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
ரூபாய் 10 கோடி செலவில் ஆலயத்தை விரிவாக்கம் செய்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதேபோல் பழைய பஸ்தியில் உள்ள அப்ஜல்கஞ்ச் மசூதிக்காக ரூ 3 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் அக்பருதீன் ஓவைஸி முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
அக்பருதீன் ஓவைஸியின் விண்ணப்பத்திற்கு முதல்வர் அனுகூலமான பதிலை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, எழுத்தாளரும் விமர்சகருமான தஸ்லிமா நஸ்ரின் அவரது இந்தச் செயல் குறித்து கருத்து தெரிவித்த போது, போலீஸார் மட்டும் 15 நிமிடம் விலக்கிக் கொள்ளப்பட்டு இருந்தால், ஹிந்துக்கள் அனைவரையும் கொன்று விடுவேன் என்று கூறியவர், தற்போது மகாகாளி கோயிலின் வளர்ச்சிக்கு ரூ.10 கோடி கேட்கிறாரே… அவர் என்ன இப்போது முகமூடி போட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது நல்ல மனிதர் ஆகிவிட்டாரா? என்று விமர்சனம் செய்திருக்கிறார்.