இந்தியா – இலங்கை மூன்றாவது டி20 ஆட்டம், ராஜ்கோட், 07.01.2023
இந்தியா அபார வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா (5 விக்கெட்டுக்கு 228, சூர்யகுமார் 112*, கில் 46, மதுஷங்கா 2-55) இலங்கை அணியை (16.4 ஓவரில் 137 ஆல் அவுட், மெண்டிஸ் 23, அர்ஷ்தீப் 3-20, ஹர்திக் 2-30) 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 35 ரன் (5 ஃபோர், 2 சிக்சர்) அடித்து ஐந்தாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் ஆடவந்தார். இன்று அவர் டி20 இன்னிங்ஸில் அவரது மூன்றாவது சதத்தை அடித்தார். சூர்யகுமார் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டத்தைக் காணக் கண் கோடி வேண்டும். குறிப்பாக அவுட்சைட் தி ஆஃப் ஸ்டெம்ப் வந்த பந்தினை விக்கட் கீப்பருக்குப் பின்னால் அவர் தூக்கி வீசிய ஒரு பந்து சிக்சருக்குப் போனது.
ஷுப்மன் கில் 14.4. ஓவரில் 46 ரன் அடித்து ஆட்டமிழந்தபோது அவர்கள் இருவரும் 113 ரன்கள் சேர்த்திருந்தனர். அதன் பின்னர் ஹார்திக் பாண்ட்யாவும் (4 ரன்) தீபக் ஹூடாவும் (4 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் அக்சர் படேல் ஆடவந்து 21 ரன் அடித்தார். இவ்வாறு இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்திருந்தது. சூர்யகுமார் 112 ரன்னோடும் அக்சர் படேல் 21 ரன்னோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பதிலுக்கு இலங்கை ஆட வந்த இலங்கை வீரர்கள் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்தனர். பவர்ப்ளேயில் 51 ரன்கள்எடுத்தனர். ஆனால் இரண்டு விக்கட்டுகளை இழந்தனர். இருப்பினும் கேட்கும் ரன் விகிதம் மிக அதிகமாக இருந்தது, மேலும் அவர்கள் அடிக்கடி விக்கெட்டுகளை இழந்து தவித்தனர். எனவே 16.4 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தில் தோல்வியடைந்தனர்.
இந்த வெற்றியால் சொந்த மண்ணில் டி20ஐ இரு தரப்பு போட்டிகளில் தோல்வியடையாத இந்திய அணி இத்தொடருடன் 11 தொடர்களை வென்றுள்ளது. இதில் ஒரு தொடர் மட்டும் டிரா ஆனது. சூர்யகுமார் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் எதிராக எளிதாக பேட்டிங் செய்ததார். அவர் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளை அடித்தார்: கிட்டத்தட்ட ஒவ்வொரு மூன்று பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி.
இந்திய அணி இந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவும் தொடர் நாயகனாக அக்சர் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.