நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது. இது பொது சிவில் சட்டத்தின் அமலாக்கத்தில் ஒரு படிநிலையாகக் கருதப்படுகிறது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வேலையில் பாஜக., ஈடுபட்டுள்ளது. அண்மைக் காலமாக மக்களிடம் மத்திய அரசு, இதுகருத்து கருத்து கேட்டுள்ள நிலையில், உத்தராகண்டில் ஏற்கெனவே இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அசாம் அரசும் இதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்யப் போவதாக அசாம் அரசு கூறியுள்ளது. நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் மாநில அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா தெரிவித்தார். இதுகுறித்துக் கூறிய அவர், “முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று பல்வேறு சூழல்களில் தெரிவித்துள்ளார்.
“மேலும், இனி முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ரத்து செய்யப்படுகிறது. இனி முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து ஆகியவை, அந்தச் சட்டத்தின் கீழ் பதியப்படாது. மாறாக சிறப்புத் திருமணங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறையும்.
“இதுவரை மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்து வந்த 94 பதிவர்களுக்கு சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்“.” என்றுகூறினார்.
இந்நிலையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு ரத்து குறித்த மசோதா விரைவில் அசாம் சட்டசபையில் தாக்கலாகும் என்று தெரிகிறது.