பெங்களூரு: குழந்தை கடத்தல் கும்பல் என வாட்ஸ்அப் மூலம் பரவிய வதந்தியால், பொதுமக்கள் தாக்கியதில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அசாம் என்ற கணினி மென்பொருள் பொறியாளர், தனது நண்பர்கள் நால்வருடன் காரில் சென்றார். அவர்களில் முகமது சலாம் கத்தார் நாட்டை சேர்ந்தவர். வழியில் கர்நாடக மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலமான பிதர் என்ற இடத்தில் காரை நிறுத்தினர். அப்போது முகமது சலாம், அங்கிருந்த குழந்தைகளுக்கு தான் வைத்திருந்த சாக்லேட்களை அளித்தார். இதனைக் கண்ட சிலர், அதனை போட்டோ எடுத்து, குழந்தை கடத்தும் கும்பல் என வாட்ஸ் ஆப் மூலம் செய்தி பரப்பினர்.
இதைக் கண்ட அந்த கிராம மக்கள் அவர்கள் நால்வரிடத்தும் வாக்குவாதம் செய்தனர். கிராம மக்களைக் கண்டு பயந்த அவர்கள் நால்வரும் காரில் ஏறி வேகமாகச் சென்றனர். இருப்பினும் அவர்களை வாகனங்களில் துரத்திய கிராம மக்கள், வழியிலேயே அவர்களை மடக்கி வெளியே இழுத்துப் போட்டு கடுமையாகத் தாக்கினர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கூட்டத்தை கலைத்தனர். அப்போது மொஹம்மத் அசாம் என்பவர் அங்கேயே உயிரிழந்து கிடந்தார். மற்ற மூவரும் படு காயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்ட போலீஸார், உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இதே போன்ற சம்பவம்தான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கடந்த மாதம் நடந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பலியானார்.