புது தில்லி: தில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என பாஜக தேர்தலின்போது சொன்னது. ஆனால், நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு மிகக் குறைவான விலையை மட்டுமே நிகழாண்டு நிர்ணயித்துள்ளது.
எனவே, நெல், கரும்பு, பருத்தி, பருப்பு வகைகளின் விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து புதிய விலை அறிவிப்பை வெளியிட வேண்டும். விவசாயிகளின் கடன் பளுவைக் குறைத்து தற்கொலைகளைத் தடுக்க மோடி அரசு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாய விரோத செயலை கண்டித்தும் நவம்பர் 30ஆம் தேதி பேரணியும், நாடாளுமன்றம் முன் நெல் கொட்டும் போராட்டமும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தில்லி புறப்பட்டுச் சென்றனர். தில்லி சென்ற அவர்கள் இந்தூர் ரயில் நிலையத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதுடன் கழுத்தில் மண்டை ஓடுகளை தொங்க விட்டு வழக்கம் போல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் தில்லி ராம்லீலா மைதானம் வரை ஊர்வலமாகவும் சென்றனர்.