புது தில்லி : பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஜன.8 இன்று இரவு 9.50க்கு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு செய்து, அறிவித்தது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு வசதியாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் இரு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மேலும் ஒரு நாள் நீட்டிக்கப் பட்ட நிலையில், இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பலத்த விவாதங்களுக்குப் பிறகு இரவு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் விவாதத்துக்கு வைக்கப்படும்.
ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத் தக்கது.