பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சபரிமலைக்குச் சென்று, காவல் துறை பாதுகாப்புடன் திரும்பிய இரு பெண்களில் ஒருவரான கனகதுர்க்காவை அவரது மாமியார் நையப் புடைத்தார். மரக் கம்பு கொண்டு தாக்கியதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
அவரது குடும்பத்தினரே அடி வெளுத்து வாங்கியுள்ளனர்.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, கேரள அரசு பெரு முயற்சி எடுத்து இரு பெண்களை சபரிமலைக்கு திருட்டுத் தனமாக அனுப்பி வைத்தது. நள்ளிரவில் அனைவரும் தூக்கிக் கொண்டிருந்த நேரத்தில், மாறு வேடம்போடச் செய்து, காவலர்களையும் மாறுவேடத்தில் அமர்த்தி, கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலராலும் விமர்சிக்கப் பட்டது.
இந்நிலையில், சபரிமலைக்குச் சென்ற இரு பெண்களின் வீடுகளுக்கும் போலீஸார் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் வலதுசாரி இயக்கங்களின் ஆதரவால் அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறி, போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று தனது கணவரின் வீட்டுக்குத் திரும்பிய கனகதுர்காவை உறவினர்கள் சூழ்ந்து கொண்டு, நையப் புடைத்தனர். அவரது மாமியார் மரக் கட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, அடித்து துவம்சம் செய்ததாகக் கூறப் படுகிறது. அவரைப் பார்த்த ஆத்திரத்தில், அவரது மாமியார் அவ்வாறு கோபத்தில் அடித்துத் துவைத்ததாகக் கூறுகின்றனர்.
இதை அடுத்து அவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அவரது உடலில் சிறிய அளவில் காயங்கள் இருந்ததாகவும் உடனே சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் போலீஸார் கூறினார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கனகதுர்கா, பெரிந்தாலமன்னவில் உள்ள சிவில் சப்ளைஸ் பிரிவில் பணி செய்யும் அரசுப் பணியாளர். அவரது விடுப்புக் காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், பணிக்கு திரும்புவதற்காக அவர் இன்று வீட்டுக்கு திரும்பினார். ஆனால், அவரது கணவர் வீட்டார் அவரது செயலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரால் தாங்கள் பட்ட அவமானத்துக்கு மருந்து இல்லை என்று குமுறிக் கொண்டிருந்தனர். கனகதுர்கா சபரிமலை செல்லும் திட்டம் தங்களுக்குத் தெரியாது என்று கூறிய அக் குடும்பத்தார், தீவிர ஐயப்ப பக்தர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்.
கனகதுர்கா மற்றும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்து ஆகியோர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றதை அவர்களது சொந்த குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளவில்லை. கனகதுர்காவின் கணவர் தான் ஒரு ஐயப்ப பக்தர் என்றும் எனது மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டேன் என்றும் செய்தியாளர்களிடம் கோபமாகத் தெரிவித்திருந்தார்.