புது தில்லி: கோல்கத்தா காவல் ஆணையர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவருடன் போனில் பேசி ஆதரவு தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேற்கு வங்க காங்கிரஸார்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மேற்கு வங்க காங்கிரஸார். தங்களின் இந்தக் கோரிக்கையை, கட்சி தலைவர் ராகுலும் ஏற்றுக் கொண்டார் என்று, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது… வங்கத்தில் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பது காங்கிரசுக்கு பேரழிவை ஏற்படுத்தும். இதை ராகுல் காந்தியிடம் எடுத்துச் சொன்னோம். அதை அவரும் ஏற்றுக் கொண்டார். திரிணாமுல் நடவடிக்கையால், பாஜக.,வே இங்கு பலம் பெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை நீங்களே தெரிவியுங்கள் என்றும், அதனை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் ராகுல் கூறினார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து இடதுசாரிகள் யோசிக்க வேண்டும். இடது சாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.
ஏற்கெனவே, கடந்த 2011ல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸைப் பிரித்து உருவாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், இருக்கும் கொஞ்ச நஞ்ச காங்கிரஸையும் பலவீனப் படுத்தி வருகிறார் என்று புகார் கூறுகின்றனர் மேற்கு வங்க காங்கிரஸார். தங்கள் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்கிவிடுவதாக காங்கிரஸார் புகார் கூறுகின்றனர். எனவேதான், இருக்கும் மிச்சம் மீது காங்கிரஸும் மம்தாவுடன் கூட்டணி வைத்தால் காணாமல் போய் விடும் என்று கூறுகின்றனர்.
முன்னதாக, மம்தா பானர்ஜி நடந்திய தர்ணா போராட்டத்தின் போது, ஒரு லைனில் ராகுல் வர இன்னொரு செல்போன் தொடர்பில் மயாவதி வர, ராகுலின் போனை காத்திருப்பில் வைக்கச் சொல்லிவிட்டு, மாயாவதியுடன் உடனே போனில் பேசினார் மம்தா பானர்ஜி என்று புகார் கூறப்படுகிறது. காங்கிரஸார் இதைக் கூறி, மாயாவதிக்கு கொடுக்கும் மதிப்பை மம்தா இங்கே ராகுலுக்குக் கொடுப்பதில்லை! ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட வேண்டும் என்ற கோஷத்தையே மம்தா வெறுக்கிறார். அவருக்கு தாமே பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை! எனவே ராகுலை மதிக்காத மம்தாவுடன் கூட்டணி வேண்டுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, மேற்கு வங்க காங்கிரஸாரை கடந்த வாரம் தில்லிக்கு நேரில் அழைத்து அவர்களுடன் கலந்தாலோசித்தார் ராகுல்! அப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனினும், மம்தாவின் பிரச்னைகள் குறித்து அதில் எழுப்ப பட்டுள்ளது. எனவே, மேற்கு வங்கத்தில் மம்தாவுடனான கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்க இயலாமல் திணறுகிறது காங்கிரஸ் மேலிடம்!
ஏற்கெனவே ஆந்திரத்தில் நாயுடுவுடன் முகத்தை முறித்துக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டது காங்கிரஸ்!