காஷ்மீரில் ராணுவ வீரர்களைக் கோழைத்தனமாக தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்றும், அவற்றின் மீது விமானப்படை தாக்குதல் நடத்துவது என்றும் பிரதமர் மோடியே முடிவு செய்தார் என்று கூறப் படுகிறது.
காஷ்மீர் புல்வாமோ தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்த மோடி சம்பிரதாய நடைமுறைகளுடன் வெறுமனே மலர் வளையம் வைத்துவிட்டு வரவில்லை. அப்போது வீரர்களின் உடல்களைச் சுமந்திருந்த பெட்டிகளை வலம் வந்து வணங்கியதுடன், பாகிஸ்தான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது. அவர்கள் வரலாற்றில் மறக்கவே முடியாத படி ஒரு பதிலடி கொடுக்கப் படும் என்று எச்சரித்தார்.
தொடர்ந்து, வெளியுறவுத் துறை மூலம் அனைத்து நாடுகளையும் தொடர்பு கொண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளை மாற்றினார். அப்போது, இஸ்ரேல் வெளிப்படையாக ஒரு வார்த்தை சொன்னது.. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டுக்கு உரிமை உள்ளது என்று கூறியது.
பின்னர் ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தின் போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தை சீனாவும் ஆதரித்தது. இப்படி பதில் தாக்குதல் தொடுக்க பன்னிரண்டு நாள் கால அவகாசத்திற்குள் பின்னணி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட இந்தியா, இன்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.
முன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் துல்லியத் தாக்குதல் நடத்தியது; இம்முறை, பாகிஸ்தான் எல்லைக்குள் 60 கி.மீ., தொலைவில் இருக்கும் உள் பகுதியில் பாலாகோ, முசாபராபாத் பகுதிகளில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னதாக, பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரமும் கொடுத்து மோடி அறிவித்தார். எத்தகைய முடிவையும் ராணுவம் மேற்கொள்ளலாம் என்றும், செயலில் இறங்கிவிட்டு தகவல் சொன்னால் போதும் என்ற அளவிலும் மோடி சுதந்திரம் கொடுத்தது ராணுவத்தை உற்சாகப் படுத்தியது.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த பின்னர், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற முடிவை பிரதமர் மோடியே எடுத்தார் என்றும், இன்று தாக்குதல் நடந்த பின்னர் விமானப்படை தாக்குதல் குறித்த விவரங்கள், பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை குறித்து பிரதமர் மோடியிடம் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கி கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
* விமானப்படை தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமரிடம் விளக்கம்
* பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ சந்திக்க உள்ளதாக தகவல்
#surgicalstrike #indianairforce #IndianArmyOurPride