புது தில்லி: தங்களிடம் பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடக்கத்தில் கொடூரமாக சித்ரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன!
காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்.26 ஆம் தேதி இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள்
வீசி அழித்தன.
மறுநாள் பாகிஸ்தான் போர் விமானங்கள் காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்தன. அவற்றை, இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டின. இதனால் பயந்து போன பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் பறந்தன. ஆனால், மிக்21 ரக விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், தான் துரத்திச் சென்ற பாகிஸ்தானின் எஃப்16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.
அப்போது அபிநந்தன் சென்ற விமானமும் கோளாறு காரணமாக செயல் இழக்க, அதில் இருந்து தப்பிக்க அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து தப்பினார். ஆனால் அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக விழுந்து விட, அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம், அவருக்கு சித்ரவதைகள் கொடுத்தது. ஆனால், பிரதமர் மோடி உடனே உலக நாடுகளுக்குச் சொல்ல, அவை கொடுத்த நெருக்கடியால் பாகிஸ்தான் ஒரே நாளில் தன் போக்கை மாற்றிக் கொண்டு, பின்னர் அடுத்த நாளில் அபிநந்தனை விடுவித்தது.
ஆனால் அந்த நேரத்தில், இந்திய விமானி தங்களிடம் சிக்கிக் கொண்டார் என்பதைச் சொல்லி பேரம் பேச பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள நான்கு முறை முயன்றார். ஆனால், பிரதமர் மோடி பாகிஸ்தானில் இருந்து வந்த எந்த போன் அழைப்பையும் ஏற்கத் தயாராக இல்லை. இம்ரான் கானுடன் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்தார். ஆனால் அவர் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மூலம் நெருக்கடி கொடுக்க, வேறு வழியின்றி பாகிஸ்தான் உடனே தன் போக்கை மாற்றிக் கொண்டது.
ஆனால் இதனை உணராமல் அல்லது, உணர்ந்தும், வேண்டுமென்றே இந்தியாவில் உள்ள பலரும் இம்ரான் கானை தூக்கி வைத்துக் கொண்டாடினர்; அபிநந்தன் குறித்து வெளியான விடியோக்களில், அபிநந்தனை பாகிஸ்தானியர்கள் மிகவும் கௌரவமாக நடத்துவதாகவும், அதற்காகவே பாகிஸ்தான் ஏதோ புனிதமான நாடு போலவும், இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என்ற ரீதியிலும் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் புளுகித் தொலைத்தார்கள்.
ஆனால், இந்தியாவுக்குத் திரும்பிய அபிநந்தன் தான் மன ரீதியாக கடும் சித்ரவதைக்கு உள்ளானதாகக் கூறினார். ஆனால், அபிநந்தனை உடல் பரிசோதனை செய்த ராணுவ மருத்துவர்கள் அவர் உடல் ரீதியாகவும் சித்ரவதைக்கு ஆளானதை கண்டறிந்தனர்.
தற்போது, பாகிஸ்தானில் அபிநந்தனுக்கு மனரீதியாக மட்டுமல்லாமல் உடல்
ரீதியாகவும் சித்ரவதை அளிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாராசூட் மூலம் இறங்கிய போது இளைஞர்கள் தாக்கியதில் அபிநந்தனுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் 24 மணி நேரம் அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் எந்த மனிதாபிமான அடிப்படையிலான முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் நிற்க வைத்தே விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்திய போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், போர் தளவாட போக்குவரத்து,
எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் நடவடிக்கைகள், இந்திய விமானப்படை தகவல்
பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் ரேடியோ அலை வரிசை என பல்வேறு தகவல்களை அவரிடம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
ஆனால், அபிநந்தன் அந்தக் கேள்விகளுக்கு சாதுர்யமாக பதிலளித்ததால், ஸ்பீக்கர்களை காதுக்கு அருகில் அலற விட்டும், அவர் மீது நீரைப் பீய்ச்சியடித்தும் சித்ரவதை செய்துள்ளனர். அடிக்கடி இடம் மாற்றி அவரை தூங்கவும் விடாமல் சித்ரவதை செய்தனராம். தலா 3 ராணுவ வீரர்கள் அடங்கிய 4 குழுக்கள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.
ஆனால், இம்ரான்கானுடன் பேசாமல் தவிர்த்து கோபத்தைக் காட்டி பிரதமர் மோடி நெருக்கடி கொடுத்ததும்,.அபிநந்தனை விடுவிக்காவிட்டால் பாகிஸ்தான் முற்றிலும் அழிவைச் சந்திக்கும் என்ற மோடியின் தகவலை சர்வதேச நாடுகள் பாகிஸ்தானுக்கு எடுத்துச் சொல்லி கடும் அழுத்தம் கொடுத்ததும், பயந்து போன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரை இந்தியாவிடம் நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பல்டி அடித்தார்.
முதல் 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் தங்களுக்கே உரிய பாணியில் சித்ரவதை கொடுத்ததும், அடுத்த 24 மணி நேரத்தில் தஙக்ள் போக்கை மாற்றிக் கொண்டு அபிநந்தன் மீதான தங்களின் அணுகுமுறையை வெளிப்படுத்தியதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.