மக்களை வெய்யிலில் வாட்டி வதக்கிய ரோகிணி நட்சத்திரம் முடிந்து மிருகசீரிஷம் வந்தவுடன் மழை பெய்து பயிர்கள் செழிக்கும் என்று முதல் தூறலை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பர். ஆனால் லட்சக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் ஹைதராபாத் நகரத்தை நோக்கி பயணிப்பார்கள்.
‘பொத்தின கௌட்’ சகோதரர்கள் அளிக்கும் மீன் பிரசாதத்துக்காகத்தான் இந்த பயணமும் காத்திருப்பும்! ஹைதராபாத் பொத்தின கௌட் குடும்பத்தார் தயாரித்து அளிக்கும் மீன் மருந்து பற்றி அறியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று கூறலாம்.
இவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் மிருகசீரிடம் தொடங்கும் நாளில் நோயாளிகளுக்கு மருந்தை உயிருள்ள மீன்குஞ்சுகளுக்குள் வைத்து நோயாளிகளின் வாயில் தொண்டைக்குள் தள்ளிவிடுவார்கள். உடனே நோயாளி அதை அப்படியே விழுங்கி விட வேண்டும்.
தொடக்க காலத்தில் பொத்தினகௌட் சகோதரர்கள் தனிப்பட்ட முறையில் செய்துவந்த இந்த சேவையை தற்போது அரசாங்கமே முன்னெடுத்து நடத்துகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆஸ்துமா நோயாளிகள் ஹைதராபாத் நோக்கி படையெடுக்கிறார்கள்.
இரண்டு நாள் முன்பாகவே ஹைதராபாத் வந்துவிடுவார்கள். சிறுவர் பெரியவர் என்ற வயது வேறுபாடின்றி அனைவரும் இதனை எடுத்துக் கொள்கிறார்கள்.
1847 முதல் இந்த மீன் பிரசாத விநியோகத்தை பொத்தினகௌட் சகோதரர்கள் இலவசமாக செய்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான மீன் பிரசாத விநியோகம் இந்த மாதம் வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணியோடு முடிந்தது.
தெலங்கானா ஹைதராபாத் ‘நாம்பல்லி’ கண்காட்சி மைதானத்தில் மீன் மருந்து விநியோகம் நடந்து முடிந்தது. 60,000 பேருக்கும் மேல் மீன் மருந்து அளிக்கப் பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தலசாணி ஸ்ரீனிவாச யாதவ் தெரிவித்தார்.
மீன் மருந்து விநியோகத்துக்கு உதவிய பொத்தின ஹரநாத் கௌட் சகோதரர்கள், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன், காவல்துறை, மெட்ரோ குடிநீர் வாரியம், மின்சார வாரியம், ரெவின்யூ மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் நன்றி தெரிவித்தார்.
மீன் மருந்து விநியோகித்த மைதானத்தில் அனைவருக்கும் உணவு வசதி மற்றும் பிற வசதி சேவைகளை அளித்த தன்னார்வ அமைப்புகளை அவர் பாராட்டினார். இன்னும் மீன் மருந்து பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் ‘தூத் பௌல்’ என்ற இடத்தில் இருக்கும் பொத்தின ஹரநாத் கௌட் வீட்டுக்குச் சென்று அவற்றை பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.