கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24% சரிந்துள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24% சரிவு கண்டுள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று ஆகஸ்ட் மாத வாகன விற்பனை குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. இதில் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் கார் விற்பனை 41.1 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
இந்தக் கால கட்டத்தில் 1.15 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளது. இருசக்கர வாகன விற்பனை 22.2 சதவீதம் சரிவு கண்டு, 15.1 லட்சம் விற்பனையாகி உள்ளன. சரக்கு வாகன விற்பனை 38.7 சதவீதம் சரிந்து 51,897 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 31.6 சதவீதம் சரிந்து 1.96 லட்சமாக உள்ளது. வாகன ஏற்றுமதியும் ஆகஸ்ட் மாதத்தில் 2.4 சதவீதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 4.2 லட்சம் வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் தயாரிப்பிலும் மந்த நிலை நீடித்து வருகிறது. கார்களை வாங்க நுகர்வோர் தயங்குவதாலும், வரும் காலங்களில் டீசல் கார்களின் அனுமதி குறித்த அரசின் நடவடிக்கை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாலும், ஓலா உபேர் போன்ற வாடகைக் கார்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் விரும்புவதாலும் கார்கள் விற்பனை மந்த நிலையில் உள்ளது என்று கூறப் படுகிறது.
மேலும், சொந்த கார் வைத்திருப்பதால் ஏற்படும் சிரமங்களைக் கணக்கில் கொண்டால், வாடகைக் கார்கள் வரவேற்கத்தக்கவை என்று பலரும் கருதுவதால், கார் விற்பனை மந்த நிலை அடைந்துள்ளதாகக் கூறப் படுகிறது. இது உற்பத்தியிலும் எதிரொலிக்கிறது.
எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை இம்மாதம் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலை 5 நாட்களும் வேலை செய்யாது என்றும், இங்கே தயாரிப்பு நிறுத்தப்படுவதாகவும் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், ஆள்வார், பந்த்ரா தொழிற்சாலைகளில் 10 நாட்களும், பந்த் நகரில் 18 நாட்களும் தயாரிப்பு நிறுத்தம் செய்யப் படுவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வாகனத் தேவை குறைந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை என அசோக் லேலண்ட் நிர்வாகம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.