முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!
சென்னையில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நவம்பர் 19ஆம் தேதி தில்லியில் ஆஜராக வேண்டும் என்று தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது
அண்மையில் அசுரன் படம் பார்ப்பதற்காக சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனியாக அமர்ந்து படம் பார்த்துவிட்டு பொதுவாக ட்விட்டர் பதிவில் பஞ்சமி நில மீட்பு குறித்து பாராட்டு தெரிவித்தார்
இதையடுத்து சென்னையில் முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை மு க ஸ்டாலின் மனமுவந்து திருப்பி ஒப்படைப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். இதன் பின்னர் சர்ச்சைகள் வெடித்தன. பாமக., நிறுவுனர் ராமதாஸுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய துணைத் தலைவர் முருகனிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை ஆவணங்களுடன் வரும் 19ஆம் தேதி தில்லியில் உள்ள ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே நாளில் பேராசிரியர் ஸ்ரீனிவாசனும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரையில் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டபோது, ”முரசொலி பஞ்சமி நில விவகாரம் குறித்து குற்றம் சாட்டிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக தற்போது மவுனம் காத்து வருகின்றனர்.
”இதுகுறித்து எஸ்சி எஸ்டி ஆணையத்தில் நான் அளித்த புகார் குறித்து தமிழக அரசு இதுவரை பதில் அளித்ததாக தெரியவில்லை. முரசொலி பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதா என தமிழக அரசு முழுமையாக விசாரணை செய்யவேண்டும்.
”சமூகநீதி சேம்பியன் என்று தன்னை காட்டிக் கொள்ளும் திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இல்லை என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து உண்மையை நிரூபிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்