சபரிமலை வரும் பெண்கள் நீதிமன்றம் சென்று, உரிய பாதுகாப்பு அனுமதி பெற்று வரவும் : அமைச்சர் பதில்!
சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது; சபரிமலைக்கு வரும் முன்னர், நீதிமன்றம் சென்று, உரிய பாதுகாப்பு அனுமதி பெற்று வந்தால் மட்டுமே கேரள போலீஸாரால் பாதுகாப்பு வழங்கப் படும் என்று கூறியுள்ளார் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்.
சபரிமலை கோயிலுக்கு செல்ல 133 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள நிலையில், அது குறித்து பேசிய கேரள அரசின் தேவசம்போர்டு அமைச்சர் கடம்பள்ளி சுரேந்திரன், சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவதாகவும், அதுவரை கோயிலுக்குள் பெண்கள் வருவதை அரசு ஆதரிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது :-
சபரிமலை சீராய்வு மனு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை கேட்டுள்ளோம். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் சட்ட நுணுக்கங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி இப்போதைக்கு சபரிமலை கோவிலுக்கு இளம்பெண்கள் வருவதை அரசு ஊக்குவிக்காது. நாளை நடை திறக்க உள்ள நிலையில் பெண்கள் கோவிலுக்கு வரவேண்டும் என்று விரும்புவதை அரசு ஆதரிக்காது.
சபரிமலை கோவிலில் தற்போதுள்ள நிலையே தொடரும். 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம். நீதிமன்ற அனுமதி பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும்.
பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலை வருவதாக வெளியான தகவல் குறித்து கேட்டபோது, சபரிமலை கோவில் வளாகம் ஆர்வலர்களுக்கான இடம் அல்ல என்றார் கடகம்பள்ளி சுரேந்திரன். கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சபரிமலை பிரச்னை கடந்த வருடம் பெருமளவில் தேர்தலில் எதிரொலித்தது. ஆளும் மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள், கேரளத்தில் காங்கிரஸுக்கு வாக்களித்து கம்யூனிஸ்ட்களை மண்ணைக் கவ்வச் செய்தனர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த முறை அப்போது பட்ட சூடை மனத்தில் கொண்டு, அமைச்சர் எச்சரிக்கை உணர்வுடன் பேசியுள்ளார்.