மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை புறக்கணிக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் அளவுக்கு மலேசியா பெரிய நாடு இல்லை என அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகம்மது (94) தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலத்தை 2ஆக பிரித்தது ஆகியவற்றை மகாதீர் முகம்மது விமர்சித்திருந்தார். மேலும் சிஏஏ விவகாரத்திலும் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
மகாதீர் இவ்வாறு சர்வதேச அளவில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கும்படி இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டும், அதனை மகாதீர் முகமது கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே கருத்தை தெரிவித்து வந்தார். மேலும், இந்தியாவால் தேடப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதி ஜாஹிர் நாயக்குக்கு மலேசிய நிரந்தரக் குடியுரிமை தருவதிலும் பிடிவாதமாக உள்ளது மலேசியா.
இதனால் வருத்தத்தை வெளியிட்ட இந்திய அரசு, மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்ய வேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியது.
எண்ணெய் வாங்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா மிகப் பெரும் சந்தையைக் கொண்டிருக்கிறது. அதுபோல், மலேசியா உலக அளவில் இரண்டாவது மிகப் பெரும் எண்ணேய் உற்பத்தியாளராக உள்ளது.
இதனால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்தது. கடந்த வாரம் திடீரென 10சதவீதத்துக்கும் மேல் சரிவு கண்டு, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்ததால் மலேசியாவில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து லங்காவியில் செய்தியாளர்களை சந்தித்த மகாதீர் முகம்மதுவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மகாதீர் முகமது, இந்தியாவின் நடவடிக்கை சரியானதல்ல. சிறிய நாடான எங்களால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க இயலாது. இந்த பிரச்சனையை தீர்க்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்று கூறினார்.