பாஜக., கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் (ஏப்.,06) 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து கட்சியின் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, பாஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர், கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாகத் திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் வழங்கும் ஆதரவும் பாராட்டும் வகையில் உள்ளது. மக்கள் ஊரடங்காக இருந்தாலும் சரி, நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் உறுதியாக நிற்கிறோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் நாட்டின் 130 கோடி மக்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நாட்டு மக்கள் இத்தகைய ஒழுக்கத்தைக் வெளிப்படுத்துவார்கள் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
நேற்று இரவு நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமை உணர்வைப் பார்த்தோம். கொரோனா வைரசின் இருளை எதிர்த்துப் போராட கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை எண்ணற்ற விளக்குகள் ஏற்றப்பட்டன.
130 கோடி இந்தியர்கள் மேற்கொண்ட இந்தப் பெரிய நடவடிக்கைகள், நம்மை நீண்ட போருக்கு தயார் படுத்தியுள்ளன. கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட நெடிய போராக இருக்கும். அதற்காக நாம் சோர்ந்துபோய் விடக் கூடாது…. என்று கூறினார்.
ஆரோக்ய சேது செயலியை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி மக்களிடம் சொல்ல உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தங்களைச் சுற்றியுள்ள நோய்த்தொற்று பற்றிய தகவல்களை செயலி மூலம் அவர்கள் பெறுவார்கள்.
இந்த கடினமான காலங்களில் இதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும் போது கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். இன்று சமூக விலகல் மற்றும் ஒழுக்கம் என்பதே உலகம் முழுவதற்குமான மந்திரமாகும் என்று மோடி பேசினார்.