தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்ல விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்கும் முறை நாளை முதல் அமலுக்கு வருவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள ஆணையில், தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்வதற்காக ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்குவது நாளை முதல் நடைமுறைக்கு வருவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருவோருக்கு ஏற்கெனவே உள்ள இ பாஸ் நடைமுறையே தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆதார் அல்லது ரேஷன் கார்டு விவரம் அளிக்கும் அனைவருக்கும், எந்த தாமதமும் இன்றி, இ – பாஸ் வழங்க முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். இந்நடைமுறை ஆக.17 திங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல, கொரோனா ஊரடங்கு காரணமாக இ – பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, அவசர மருத்துவ தேவை போன்றவற்றுக்கு செல்ல விரும்புவோருக்கு மட்டும் இ – பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் வெளியூர் செல்ல விரும்புவோர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இத்தகைய கெடுபிடிகளால், போலி இ – பாஸ் அச்சடித்து விற்பனை செய்யப்பட்ட முறைகேடுகளும் அரங்கேறின. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இ – பாஸ் பெறும் முறைகேடுகளும் அதிகரித்தன. எனவே இ – பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என்று, பொது மக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், இ – பாஸ் நடைமுறையை ரத்து செய்யும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இனி இ – பாஸ் வழங்க உத்தரவிடப் பட்டது. இதன்படி, அனைவரும் கட்டாயம் இபாஸ் வைத்திருக்க வேண்டும் என்றும், இபாஸ் பெற்றுக் கொண்டுதான் அடுத்த மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், இபாஸ் இல்லாமல் வந்தால் நிச்சயம் மாவட்ட எல்லைகளில் போலீஸார் திருப்பி அனுப்புவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.