தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியை நேற்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மும்பை பைக்குல்லா சிறையில் ரியா அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்திய திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக கன்னட நடிகை ராகினி, சஞ்சனா கல்ராணி உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கு விசாரணையிலும் போதைப்பொருள் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக ரியா நேற்று கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 22 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் கோரி ரியா வழங்கிய விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் ஒரு போதை மருந்து கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், அவரது முன்னாள் காதலரான சுஷாந்த் சிங்கிற்காக போதை மருந்துகளை வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட உடனேயே, 28 வயதான ரியா மத்திய மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது.
பின்னர் இரவு 7.15 மணியளவில் தெற்கு மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இன்று காலை ரியா சக்ரவர்த்தி பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ரியாவின் சகோதரர் ஷோயிக், சாமுவேல் மிராண்டா மற்றும் இன்னும் சிலர் வழக்கு சுஷாந்த் மரண வழக்கு விசாரணையில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.