கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு சனிக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக வேளாண் துறை அமைச்சா் துரைக்கண்ணு (72) கடந்த அக்.13ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.
அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 90 சதவீதம் நுரையீரல் பாதிக்கப் பட்டது! ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியதால், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15க்கு அவர் காலமானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் தமிழக அமைச்சர் இவர். 1948இல் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்த இவர், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் சென்று விசாரித்தனர். தொடர்ந்து ஆம்புலன்சின் உள்ளே துரைக்கண்ணுவின் உடல் இருந்த நிலையில், அதனருகே வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படத்திற்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைக்கண்ணுவின் இழப்பு தனக்கு வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் விடுத்த இரங்கல் செய்தியில்…. தமிழக வேளாண்துறை அமைச்சரும், அதிமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தஞ்சாவூர் மாவட்டம் இராஜகிரி கிராமத்தில் மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த துரைக்கண்ணு கடுமையான உழைப்பின் காரணமாக அமைச்சராக உயர்ந்தார். பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன்பின் வந்த இரு தேர்தல்களிலும் அப்பதவியை தக்க வைத்துக் கொண்டார். 2016-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வேளாண்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். மிகவும் எளியவராகவும், அணுகுவதற்கு எளிமையானவராகவும் திகழ்ந்த அவர், தொகுதி மக்களின் அன்பை பெற்றிருந்தார்.
என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது மதிப்பு கொண்டிருந்தவர். கடந்த 13-ஆம் தேதி திண்டிவனம் அருகே மகிழுந்தில் சென்ற போது உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர், உடனடியாக சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின் பயனாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.