தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் தங்கள் பகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். முன்னதாக தங்களுக்கு கட்சியின் சார்பில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பலரும் தங்கள் தொகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகள் உதவிகள் நிகழ்ச்சிகளை நடத்தி தொகுதி மக்களை கவர்ந்து வந்தனர்.
அந்த வகையில் பாஜக சார்பில் போட்டியிட இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் கௌதமி… அதேநேரம் ராஜபாளையம் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் தொகுதி தனக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜியும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ராஜபாளையம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அதில் கௌதமி போட்டியிடுவார் என்றும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒன்று உலா வந்தது. இந்தப் பட்டியலைக் கண்டு அதிகம் டென்ஷன் ஆனவர் கே டி ராஜேந்திர பாலாஜி தான்!
இந்நிலையில் தற்போது தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்த அடிப்படையில் ராஜபாளையம் அதிமுகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது! இதையடுத்து ராஜேந்திரபாலாஜி தரப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் பணிகளை தொடங்கியுள்ளது. அதேநேரம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தாமல் வழக்கம்போல் ஒரு நன்றியறிதல் கருத்தை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் கௌதமி!
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.
என்றும் அன்புடன்
உங்கள் கௌதமி