ராஜபாளையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன் – திலகவதி தம்பதி. இவர்களது மகள் கௌசல்யா (18). இவர் ராஜபாளையம் அருகே மொட்டமலைப் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படுவதை முன்னிட்டு கௌசல்யா, நேற்று முன்தினம் விடுதிக்கு வந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை, கௌசல்யாவின் பெற்றோரை தொடர்புகொண்ட கல்லூரி நிர்வாகிகள் கௌசல்யா விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர், மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், போலீசார் விரைந்து சென்று, மாணவி கௌசல்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவி கௌசல்யா தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.