தில்லி ரோஹிணி கோர்ட் வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரௌடி ஜிதேந்திர கோகி உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்துள்ளனர். தில்லியில் தேடப்படும் குற்றவாளியான ஜிதேந்திர கோகியின் மீது, வக்கீல்கள் போல் உடையணிந்து வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி ரோஹிணி கோர்ட் வளாகத்தில் இன்று காலை வழக்கம் போல் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென கோர்ட் அறை எண் 206 இல் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்டிருந்த ஜிதேந்த்ர கோகியை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதை அடுத்து, அங்கிருந்து பலரும் தலைதெறிக்க வெளியில் ஓடி வந்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீஸார், உடனே அந்த இடத்துக்கு விரைந்தனர். பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ரௌடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர், ஜிதேந்திர கோகியை சுட்டுக் கொன்றவர்கள் மீது போலீசார் சுட்டதாகவும் அதில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பெண் வக்கீல் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 35-40 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வக்கீல்கள் போல உடை அணிந்து வந்ததாகவும், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி ஜிதேந்தர் கோகி உள்பட நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிதேந்திரா மற்றும் அவரது நண்பன் குல்தீப் ஃபஸ்ஸா இருவரும் தில்லி பல்கலையின் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் சிறப்பு குழுவினரால் இரு வருடங்கள் முன் குருக்ராமில் வைத்து கைது செய்யப் பட்டனர். அதன் பின்னர் போலீஸாரிடன் பிடியில் இருந்து மார்ச் 25ம் தேதி குல்தீப் தப்பியுள்ளான். இவர்களின் தொடர்பு வளையத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக சிறப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோகி 2020இல் கைது செய்யப் பட்ட போது ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.