வடக்கன்ஸ் என பிரச்னையை கிளப்புகிற பிரிவினைவாதிகளிடம் தமிழர்கள் உஷாராக இருக்க வேண்டும்; இது ஒரு அந்நிய சதித் திட்டம்; ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
சமீப காலமாக வட இந்தியத் தொழிலாளர்களை மையப்படுத்தி வடக்கன்ஸ் பிரச்சனை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. பீகார், ஓரிசா, வடக்கு கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல வட இந்தியப் பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி வருகிறார்கள். இவர்களால் தமிழர்கள் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்று அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
இந்தப் பிரச்சினைக்குப் பின் மிகப்பெரும் வெளிநாட்டுச் சதியானது உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தொழில் அடிப்படையிலான பிரிவினை வேலைகள் சமீபத்தில் நடக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பாராளுமன்றத் தேர்தல் 2024ல் வரவிருக்கின்ற இந்நிலையில் அரசியல் லாபம் அடையத் துடிக்கும் சில சுயநல அரசியல் சக்திகள் இந்த வெளிநாட்டு சதிக்கு துணை போகின்றனர்.
தமிழகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்துவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள் அதே சமயம் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஊடுறுவி வரும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கொடிப்பிடித்தவர்களும் இவர்களே.
இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து விரட்டப்பட்ட இந்திய வம்சாவளியான மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க மத்திய அரசு CAA சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த விஷம சக்திகளோ முஸ்லிம் நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட நாட்டிலிருந்து வெளியேறிய அதாவது ஊடுருவிய முஸ்லீம்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராடினார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சங்கத் தமிழ் புலவன் பாடியது தான் நாம் தற்போது மனதில் கொள்ளவேண்டும் “யாதும் ஊரே! யாவரும் கேளீர்..” அந்த அடிப்படையில் இன்று உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்கிறார்கள் . டில்லியில் மாயாபுரி என்ற இடத்தில் அதிகம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் டில்லி அரசு பணியில் இருப்பவர்கள்.
அதுபோல் குஜராத் மோடியின் சட்டசபை தொகுதியாக இருந்த மணி நகர் தொகுதியில் அதிகம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். கர்நாடகாவில் பெங்களூருவில் பல லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் எல்லாம் கோலோச்சுபவர்கள் தமிழர்களே.
மகாராஷ்டிரா மும்பை தாராவி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தலைச் சுமை தூக்குவோர், உணவு வியாபாரம் செய்பவர்கள். இப்படியாக இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதியை குறிப்பிட்டு சொல்லலாம்.
பிற இனத்தவர்கள் போலவே தமிழர்களும் ஒரிடத்தில் சேர்ந்து வாழவே செய்கிறார்கள். காரணம் இயல்பாக ஒருவருக்கு ஒருவர்உதவிகரமாக, ஒற்றுமையாக, பாதுகாப்பாக வாழ்வதை எல்லா உயிரினங்களும் கடைப்பிடிக்கும் முறைதான். இதில் மனித இனம் எப்படி வேறுபடும்?! இதையெல்லாம் சுலபமாக மறந்தவிட்டு சீமான், திருமுருகன்காந்தி, வேல்முருகன் போன்றவர்கள் சுயநல அரசியலுக்காக தேவையற்ற வகையில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்கிறார்கள்.
இதே போலத்தான் பல வருடங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் சிவசேனா எழுப்பியது. மும்பை வருபவர்களுக்கு பாஸ்போர்ட் விசா நடைமுறை படுத்த வேண்டும் என்றுகூட வாதம் வைக்கப்பட்டது. ஆனால், அவை நாளடைவில் எடுபடாத சிந்தாந்தம் என்பதால் அவர்கள் அதனை கைவிட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரு சந்தர்பத்தில் இதே போல பேசி வந்தது. தற்போது இவர்கள் பேசும் வடக்கன்ஸ் என்பது பங்களாதேஷ் ரோஹிங்கியா முஸ்லீம்களால் ஏற்படும் ஆபத்து பற்றியது அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல லட்சம் ரோஹிங்கியா, பங்களாதேஷ் முஸ்லீம்கள் சட்டவிரோதமாக ஊடுருவி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னையிலும், திருப்பூரிலும் கைது செய்யப்பட்ட ஊடுருவி வந்த பங்களாதேஷ் ரோஹிங்கியா முஸ்லீம்களை நீதி மன்றம் என்ன செய்தது என்பது கேள்விக்குறிதான்? இந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள் தான் ஆபத்தானவர்கள். ஆனால் இதுபற்றி எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் பேசியதில்லை. பேசவும் மாட்டார்கள். ஆனால் ஏழ்மை காரணமாக வட இந்தியாவிலிருந்து பிழைக்க வழி தேடி தொழிலாளிகள் தமிழகத்திற்கு வருகிறார்கள். அது உண்மை தான். அவர்கள் குறைவான சம்பளத்தில் கடுமையாக உழைக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிகம் தீய பழக்கம் இல்லாதவர்களாக பெரும்பாலானோர் இருக்கிறார்கள். அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டே இங்கு உழைக்கிறார்கள்.
இதனால், தமிழன் வேலைவாய்ப்பை இழக்கிறான் என்பது அப்பட்டமான பொய். அவர்கள் செய்கின்ற வேலைகளை தமிழர்கள் செய்ய முன்வருவதில்லை.அதே சமயம், தொழிலாளர்களுக்கு வேலை தருபவர்கள் தமிழ்நாட்டின் முதலாளிகள். இதனால் தமிழ்நாட்டின் முதலாளிகள் லாபம் அடைவதுடன், தொழில்கள் பெருக காரணமாக இந்த தொழிலாளர்கள் அமைகிறார்கள்.
புதிய சட்டசபை என திமுக தலைவர் கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட ஓமந்தூரார் மாளிகை கட்டிட வேலையில் பெருமான்மையாக ஈடுபட்டது வட இந்திய தொழிலாளர்கள் தான். அதனால் தான், அதன் திறப்பு விழாவின் போது, இரவு தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்து கொடுத்தார். அதில் இந்தி பாடல் ஒலிக்க அவர்கள் நடனமாடிய செய்தி வந்தது. அதனை திமுகவோ, திகவோ, கம்யூனிஸ்ட்களோ.. ஏன் யாருமே எதிர்க்கவோ விமர்சிக்கவோ இல்லை.
வடக்கன்ஸ் என்று பேசுபவர்கள் வட இந்திய தொழிலாளர்களை கேவலப்படுத்த, தமிழர்களை தூண்டி கலவரத்தை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். அதே சமயம், சட்டவிரோத ரோஹிங்கியா முஸ்லீம்கள் குறித்து பேசுவதில்லை. அவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
வடக்கன்ஸ் என பிரச்சனையை கிளப்புகிற பிரிவினைவாதிகளிடம் தமிழர்கள் உஷாராக இருக்க வேண்டும். இவர்களது இந்த பிரிவினைப் பேச்சால் யாதும் ஊரே! யாவரும் கேளீர்!! என நாடு நெடுகிலும் சென்று தொழில் அதிபர்களாக, அரசு உயர் பணியாளராக, தொழிலாளிகளாக இருந்து மற்றவர்களால் மதிக்கப்படும் தமிழர்கள் வாழ்வாதரம் கேள்விக்குறியாகிவிடும். சீமான் போன்றவர்களுக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழனை உசுப்பியேற்றி அவன் தலையில் மிளகாய் அரைத்து எந்த தொழிலும் செய்யாமல், உழைக்காமல் பெரும் பணக்காரர்களாக வலம் வருவார்கள். ஆனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, மேம்பாடு பாதிக்கப்படும்.
அதுபோல், தமிழகத்தில் கூலித் தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழில் வளம், உள்கட்டமைப்பு மேம்பாடு பெரிதும் பாதிக்கப்படும். எனவே, தமிழர்கள் வடக்கன்ஸ் பிரச்சனையில் உள்ள உண்மை உணர்ந்து இந்திய ஒருமைப்பாட்டிற்கு உறுதுணையாகவும், திட்டமிட்டு சதி செய்து உள்ளே வரும் ரோஹிங்கியா ஊடுருவல்காரர்கள் பற்றி எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.