
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். மேலும், வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு காளை மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், 652 காளைகள், 370 வீரர்கள் கலந்துக்கொண்டனர். காளைகளையும், வீரர்களையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து களத்துக்குள் அனுப்பினர். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் கோட்டாட்சியர் எம்.ரஞ்சித் துவக்கி வைத்தார். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டது.

அவிழ்த்து விடப்பட்ட காளையை அடக்க முயன்ற 9 வீரர்கள், 16 காளை உரிமையாளர்கள், ஒரு பார்வையாளர் என 26 காயமடைந்தனர். இதில் 12 பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 50 பேர் கொண்ட வீரர்கள் மாடு பிடிக்க களமிறக்கப்பட்டனர். தமிழ் பல்கலைகழக போலீஸார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அரியலுார் மாவட்டம் வெங்கனுார் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து, காளை வடிவாசலை விட்டு வெளியே ஓடியது. காளை உரிமையாளர் பிடிக்க துரத்திச் சென்றார். அப்போது, காளை மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலத்தின் மீது ஏறி ஓடியபோது, பாலத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்தது.





