முன்னாள் தினமணியின் ஆசிரியராக இருந்த தமிழறிஞர், தொல்லியல் அறிஞர் கல்வெட்டியல் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பாஜக., தலைவர்கள், தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் இரங்கல் குறிப்பில்….
இந்தியா போற்றும் சிறந்த தொல்லியல் துறை அறிஞரும்,சிறந்த தமிழ் இலக்கியவாதியும், முன்னாள் தினமணி ஆசிரியருமான பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் இலக்கியம் மற்றும் தொல்லியல் துறையின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். – என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக.,வைச் சேர்ந்தவரும் பாஜக., தேசிய செயலருமான ஹெச்.ராஜா தனது இரங்கல் குறிப்பில்…
முன்னாள் தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் காலமானார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1948ல் ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டதை எதிர்த்து திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் எனது தகப்பனார் பேராசிரியர் ஹரிஹரன் அவர்கள் பாஜக முன்னாள் அகில இந்திய தலைவர் திரு ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அண்ணா ஜி அவர்கள் ஆகியோர் சத்யாகிரகம் செய்து ஆறு மாதகாலம் மதுரை சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தனர்.. பின்னாளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பின் தினமணி ஆசிரியராகவும் பணியாற்றினார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக பாஜக., மூத்த தலைவரும் மாநிலங்களவையின் உறுப்பினருமான இல.கணேசன் தனது இரங்கல் குறிப்பில்,
அமரர் ஐராவதம் மகாதேவன் 1948ல் ஆர்.எஸ்.எஸ் மீது விதிக்கப்பட்ட அநியாயத் தடையை நீக்கக் கோரி சத்யாகிரகம் செய்து சிறை சென்றவர். மதுரைச் சிறையில் இல.நாராயணன், காரைக்குடி ஹரிஹர சர்மா (H.ராஜாவின் தந்தை) ஆகியோருடன் இருந்தவர்.
“கராக்ரே வஸதே லக்ஷ்மி” எனத் தொடங்கும் காலை நேரத் துதி போல ‘காராக்ரே வஸதே’ எனத் தொடங்கி சிறையில் உள்ளவரை பட்டியலிட்டு பாடியவர்.
பின்னர் IAS தேர்வில் வெற்றி பெற்ற அவர் ஒருமுறை பிரதமர் நேரு “இன்று நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினை எது?” என கேட்டபோது “மக்களிடம் தேசிய உணர்வு மங்கி வருகிறது” எனச் சொல்லி பாராட்டுக்கள் பெற்றவர்.
Modern Bread அறிமுக நேரம். அரசின் ஆணை பெற அவருக்கு ஒரு தொகை வழங்க முன் வந்த போது அந்தத் தொகையை அரசு தர வேண்டிய பணத்தில் குறைத்துக் கொண்டு அரசுக்கு லாபம் கூட்டியவர்.
எழுத்தாராய்சி வல்லுனர். தேசிய அளவில் ஒரே எழுத்து வடிவம் உருமாறி உருமாறி இன்று பல எழுத்து வடிவமாக மாறியுள்ளது என நிரூபித்தவர்.
தேசப் பாதுகாப்பு நிதியாக இவரது மனைவி தன் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மாங்கல்ய தங்கத்தை லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் ஒப்படைத்தார். – என்று கூறியுள்ளார். மேலும், இன்று மாலை நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இல.கணேசன்.
தமிழக கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது இரங்கல் குறிப்பில், பாரத தொல்லியல் துறையின் பிதாமகரும், தமிழ் பிரமி எழுத்து வடிவத்தினை உலகறிய உரைத்தவரும், சிந்து நாகரிக எழுத்துகள் திராவிட குடும்பத்தினை சேர்ந்தது என கண்டறிந்த மாமேதையான பத்மஶ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவுக்கு தமிழக அரசின் சார்பாக இதயபூர்வமான அஞ்சலி ! என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், தேசியவாதியுமான ஐராவதம் மகாதேவன் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.. என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் குறிப்பில், ஐராவதம் மகாதேவன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தவர். கல்லூரி படிப்பை முடித்தபின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியராக பணியாற்றினார். அவரது முதல் சங்கப் பணியை திருவண்ணாமலையில் துவக்கினார். அன்று அவர், அண்ணாமலையார் கோயில் தெற்கு சன்னதி தெருவில் அவரது கையால் வைத்த ஆல மரம், இன்று பெரிய விருட்சமாக நிலைத்து நிற்கிறது. என்னுடன் இணைந்து சமுதாய பணியாற்றியவர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர் ப.பூ. குருஜியிடம் ஆழ்ந்த மதிப்பும், அன்பும் கொண்டிருந்தார். ஸ்ரீ குருஜி அவர்கள், அவருக்கு அளித்த உத்வேகத்தால், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, ஆட்சிப் பணியில் இணைந்து தேசப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய நாளிதழான தினமணியின் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றினார்.
தேசத்தின் மீது அபார பக்தி கொண்டவரான ஐராவதம் மகாதேவன் அவர்களின் பத்திரிகை பணி, நேர்மை, உழைப்பை பத்திரிகை உலகம் என்றும் போற்றும்.
அவரது இழப்பால் வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்… என்று குறிப்பிட்டுள்ளார்.