சபரிமலை விவகாரத்தில் மேலும் மேலும் நெருக்கடியையும் சிக்கலையும் மாநில அரசும் போலீஸாரும் கொடுப்பதால், இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாபெரும் பேரணி ஒன்றை சபரிமலை எஸ்பி அலுவலகம் நோக்கி நடத்த இருப்பதாக, பாஜகவின் என்.ஹரி கூறியுள்ளார்.
அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் இதனை உடனடியாக அமல் படுத்தியே ஆக வேண்டும் என்று களம் இறங்கி, பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் கேரள கம்யூனிஸ அரசால் சபரிமலையில் பெரும் பதற்றமும் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் தூபம் போடும் விதமாக, ஒரு வழிபாட்டுத் தலத்தில் 144 தடை உத்தரவு போட்டு, சரண கோஷம் விளிக்கக் கூடாது, கூட்டம் கூடக் கூடாது, யாரும் தங்கக் கூடாது என்றெல்லாம் கெடுபிடி காட்டி வருகிறது கேரள போலீஸ்! இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கேரள போலீஸார் தடியடி நடத்தி விரட்டி வருகின்றனர். மேலும், சரண கோஷம் விளிப்பவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்தப் படும் என்று கேரள மாநில பாஜக., அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..
கேரள மாநிலம் கோட்டயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஹரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, கேரள அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் மறித்து வருகின்றனர்.
கேரளத்துக்கு என்று தேசிய மரியாதை ஒன்று இருந்தது. அதை அரசு கெடுத்துக் கொண்டிருக்கிறது. சிபிஎம் பாசிஸ அரசை நடத்தி வருகிறது. வரும் 28ம் தேதி எல்லா எஸ்பி., அலுவலகத்தையும் நோக்கி பேரணி நடத்தப் படும். இங்கும் எஸ்பி அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப் படும். போலீஸ் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் கேரள அரசை எதிர்த்து இந்தப் பேரணி நடத்தப் படும்.
நிலக்கல் பகுதியில் இருந்து தரிசனம் செய்ய 6 மணி நேரம் மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். குறிப்பாக பல கம்யூனிஸ்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுத்து பாஜக., தலைவர் கே.சுரேந்திரன் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டார்… என்று கூறினார் என்.ஹரி.


