திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்திய, வாராந்திர மாதாந்திர, வருடாந்திர உற்சவங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.
அவற்றில் நித்திய உற்சவமான கல்யாண உற்சவம், வருடாந்திர உற்சவமான பிரம்மோற்ஸவம் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் வருடாந்திர உற்சவங்களில் ஊடல் உற்சவமும் குறிப்பிடத்தக்க தக்க ஒன்று. ஆண்டுக்கு ஒருமுறை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஊடல் உற்சவம் இன்று மாலை கோவில் திரு மாடவீதிகளில் ஒன்றான கிழக்கு மாட வீதியில் நடைபெற்றது.
ஊடல் உற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையானின் உற்சவரான மலையப்பசுவாமி தன்னுடைய தேவியர்களான ஸ்ரீதேவி,பூதேவி ஆகியோர் மீது ஊடல் கொண்டு கோவிலில் இருந்து தனியாக புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வலம் சென்றார்.
தங்களுடைய தலைவனை காணாத தேவியர்களான ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக இடம் சென்று கிழக்கு மாடவீதியில் தங்களுடைய தலைவனை வழிமறித்தனர்.
அப்போது மலையப்ப சுவாமியை ஒருபுறமும், உபய நாச்சியார்களை அவருக்கு எதிர் புறத்திலும் எழுந்தருள செய்த கோவில் அர்ச்சகர்கள் இறை மூர்த்தங்கள் சார்பாக எதிர் எதிர் திசையில் நின்று மலர் பந்துகளை இறை மூர்த்திகளை நோக்கி வீசி எறிந்தனர்.
இறைவன், இறைவிகள் ஆகியோர் சார்பில் அர்ச்சகர்கள் வீசி எறிந்த மலர் பந்துகளை பிடிக்க பக்தர்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டது. நிறைவாக வேத மந்திரங்கள், திவ்ய பிரபந்தம் ஆகிவற்றின் சாட்சியாக ஊடல் தணிந்த உற்சவமூர்த்திகள் கோவிலை சென்றடைந்தனர்.
சாதாரண மனிதர்களின் குடும்ப வாழ்க்கை, காதல் வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் ஊடல்கள், அதனை தொடர்ந்து நடைபெறும் சமாதானம் ஆகிவற்றை குறிப்பிடும் வகையில் நடைபெற்ற ஏழுமலையானின் ஊடல் உற்சவம் பக்தர்களின் கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.