மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் மார்கழி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது.
காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.
மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தந்தாலும், இத்தலம் வந்து சேவித்த பக்தர்களின் வாழ்வில், எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயமானதால் இவருக்கு ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும்.
மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து செந்தூர காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவும், காரமடை சுற்று வட்டார பஜனைக் குழுவினரின் சிறப்பு பஜனையும் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம்,ஊட்டி,குன்னூர்,கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம்,காரமடை,தேக்கம்பட்டி,புஜங்னூர்,வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.