நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில், தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் வாக்குப் பதிவில், முதல் கள்ள ஓட்டு நாகர்கோவிலில் பதிவானதாகக் கூறப் படுகிறது.
கன்னியாகுமரி தொகுதியில் கள்ள ஓட்டு போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிலாங்காலை பகுதியில் 15வது வாக்குச்சாவடியில் அஜின் என்பவரின் ஓட்டை வேறு யாரோ ஒருவர் போட்டுள்ளார்.
கள்ள ஓட்டுகள் போடப்படுவதைத் தடுக்க பல வழிமுறைகளை தேர்தல் ஆணையம் கையாண்டு வருகிறது. ஆதாருடன் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் உடன் புகைப்பட அடையாள அட்டை சரிபார்ப்பு என்று இத்தனை இருந்தும், தேர்தலில் போலியாக வாக்காளர் அட்டை தயாரித்து, கள்ள ஓட்டு போடப் படுவது நடைபெற்று வருகிறது என்பது இந்தத் தேர்தலிலும் வெளிப்படையாகத் தெரிந்துள்ளது.
ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால், கள்ள ஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.