ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யவும், அரசின் பிடியிலிருந்து ஆலயத்தை மீட்கவும் மாநிலம் தழுவிய அளவில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகக் கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்த தகவலில், மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டு, இந்து ஆலயங்களை தன் கைப்பிடிக்குள் வைத்து, அதனை சீரழித்து வருகிறது அரசு. ஒவ்வொரு கோயிலிலும் விதம் விதமாக ஆலய தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய பக்தர்கள் கேவலப் படுத்தப் படுகிறார்கள். இத்தகைய பொருளாதார தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக, இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆன்மிக அமைப்புகளையும், பக்தர்களையும் ஒருங்கிணைத்து இந்து முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது.
இந்துக்களின் உணர்வுகளை உணர்ந்து, தமிழக அரசு இந்து ஆன்மிகவாதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து, தனி அதிகாரம் உள்ள வாரியத்திடம் ஆலய நிர்வாகத்தை ஒப்படைக்கக் கோருக்கிறோம்.
சென்னையில் மூன்று மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். 14.7.2019 ஞாயிறு, காலை 10 மணி அளவில், வடசென்னையில் மாநில செயலாளர் மணலி த. மனோகரன் தலைமையில் மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெறும்.
மத்திய சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தலைமையிலும்,
தென் சென்னை பகுதியில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் தலைமையிலும் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர, மாவட்ட, தொகுதி, வட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள், இந்து அன்னையர் முன்னணி, இந்து வழக்கறிஞர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர்களும், பொதுமக்களும், ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்… என்று தெரிவித்துள்ளது.