வரதராஜப் பெருமாள் என்றாலே நின்றகோலத்தில், கன்னத்தில் குழி விழச் சிரிக்கும் அழகும், வரம் தரும் கரத்தினனாய் அன்பர்களை வாவென்று அழைக்கும் கோலமும் தான் பக்தர்களுக்கு நினைவில் வரும். காஞ்சி அத்திவரதர் பெருமானை அன்பர்கள் நாளை முதல் அவ்வாறேயான கோலத்தில் தரிசனம் செய்யலாம். அதற்கான முன்னேற்பாடாக இன்று மதியத்துடன் சயனக்கோலத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவுபெற்றது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 48 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் 31 நாட்களில், அத்திவரதர் சயனக்கோலத்தில் அன்பர்களுக்கு தரிசனம் அளித்து வந்தார். சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதருக்கு மஞ்சள் நிற பட்டாடை, மல்லிகை, ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அத்திவரதரின் சயனக் கோலக் காட்சியின் நிறைவு நாளான இன்று காலை அன்பர்கள் கூட்டம் அதிகம் இல்லை. ஆயினும், 30ஆம் நாளான நேற்று ஒரே நாளில் சுமார் 2.50 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை அத்திவரதரை 43 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்லதாக அதிகாரிகள் கூறினர்.
அத்திவரதரின் நின்ற கோல தரிசன ஏற்பாட்டுக்காக, இன்று மதியத்துடன் பொது சேவை நிறுத்தப் பட்டது. விஐபி, விவிஐபி தரிசனம் பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
இன்று அத்திவரதரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் அதிமுக நிர்வாகிகளும் தரிசனம் செய்தனர்.
அத்தி வரதர் வைபவத்தில் இதுவரை 2 கோடியே 70 லட்சம் ரூபாய்
காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாகவும், நேற்று எண்ணப் பட்ட 6 உண்டியலில் 69,34,538 ரூபாயும் 25 கிராம் தங்கம் மற்றும் 274 கிராம் வெள்ளி இருந்ததாகவும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.