ஸ்பூர்த்தி பதம் – வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும்
108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
12. கண்ணோட்டம்!
ஸ்லோகம்:
அதோத: பஸ்யத: கஸ்ய மஹிமா நோபசீயதே |உபர்யுபரி பஸ்யந்த: சர்வ ஏவ தரித்ரதி ||
– ஹிதோபதேசம்.
பொருள்:
கீழே பார்த்துக் கொண்டு நடப்பது வினய குணம் உள்ளவர்களின் இயல்பு. இந்த நற்குணத்தினால் யாருக்குத்தான் உயர்வு வராது? அகங்காரம் கர்வம் தலைக்கேறி மேலே பார்த்துக்கொண்டே நடப்பவர்கள் அந்த உயர்வை இழந்த வறியவர்களே!
விளக்கம்:
ஞானத்தில் நம்மை விட உயர்ந்தவர்களோடும் செல்வத்தில் நம்மை விட தாழ்ந்தவர்களோடும் ஒப்பிடும்போது பணிவு, திருப்தி, ஞானம் பெறவேண்டும் என்ற ஆர்வம் – போன்றவை உண்டாகும். கர்வத்தோடு நடந்துகொள்வது தீமை பயக்கும் என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.
இந்த சுலோகம் செல்வத்தில் மட்டுமின்றி ஞானத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறுகிறது. சிலர் அறிவாற்றலில் தம்மை விடத் தாழ்ந்தவர்களைப் பார்த்து தாமே மகா மேதாவி என்று நினைத்து கர்வமுறுவர்.
தம்மை விட உயர்ந்த அறிவாளிகளை எதிர்கொள்ளும் போது தம் அறிவு எத்தனை அற்பமானது என்று உணர்வர். ஞானம் பெறுவதற்கு இது போன்ற கண்ணோட்டமே தேவை.
செல்வத்தில் தன்னைவிட கீழானவர்களோடு ஒப்பிட்டால் ஏழைகளிடம் இரக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் வரும்.
ஞானத்தைப் பெறுவதில் எப்போதும் ஆர்வத்தோடு விளங்கவேண்டும். செல்வத்தை பொருத்தமட்டில் திருப்தியோடு விளங்க வேண்டும் என்பது மூத்தோர் சொல்.