குதிரைவாலி சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி – 4 கப்,
பீன்ஸ், கேரட் – 250 கிராம்,
கத்திரிக்காய், தக்காளி – தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
முருங்கைக்காய் – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
முதலில் குதிரைவாலி அரிசியை தண்ணீரில் கழுவி நன்கு ஊறவைக்கவும். அதன் பிறகு புளியை நன்றாக கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் துவரம் பருப்பு மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
தொடர்ந்து தனியாக அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை விட்டுக் கொதிக்க வைக்கவும்.
அதன் பிறகு, அதில் ஊறவைத்த குதிரைவாலி அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும். பின்னர் 7 1/2 கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
அரிசி வெந்து குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவி கீழ் இறக்கவும்.
இப்போது இந்த சுவையான குதிரைவாலி சாம்பார் சாதத்தை ருசித்து மகிழவும்.