நாடு முழுதும் ஒரு குரலில் பேசிக் கொண்டிருக்க, தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மட்டும், தேச விரோத பேச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்க, தன் மீதான விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, தக்க பதிலடி கொடுத்தார். இங்குள்ள அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன்.
காஷ்மீர் விஷயம் என்பது இந்த நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்று. காஷ்மீர் தான் பயங்கரவாதிகளுக்கு தாய் வீடாக இருந்துள்ளது. அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவிவதற்கு அது கேட்வே ஆப் இந்தியா என்பது போல் இருக்கிறது. அதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று மிகவும் சிரமப்பட்டு ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள்!
ஒரு அருமையான ராஜதந்திரமாக முதலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, எவரெல்லாம் பிரச்னைகள் செய்கிறார்களோ அவர்களை எல்லாம் வீட்டுக்குள் தடுத்து வைத்து, அரசு என்ன செய்கிறது என்று யாருக்கும் தெரியாத படி, மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் முதலில் அங்கே இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி, அதன் பிறகு மக்களவைக்கு கொண்டு வந்து சட்டமாக்கி, அதனை ராஜதந்திரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க ஒரு நல்ல ராஜதந்திர நடவடிக்கை. ஆனால் அதை விவாதப் பொருளாக்கி, அதை அவர்கள் தெரிந்து கொண்டு, இது தொடர்பாக முழித்துக் கொண்டு… இதை நிச்சயமாக செய்துவிட அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள் !
தயவுசெய்து நம் அரசியல்வாதிகளுக்கு எதை அரசியல் ஆக்க வேண்டும் என்று தெரிய வேண்டும் இது நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்பதற்காகத்தான் நான் அவ்வாறு சொன்னேன்!
எதை அரசியல் ஆக்க வேண்டும் எதை அரசியலாக்கக் கூடாது என்பதை மதிப்புக்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்! என்றார் ரஜினிகாந்த்.
அவரிடம், போயஸ் தோட்டம் அரசியல் களத்தின் மையமாகுமா என்று கேள்வி கேட்டனர். அதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார் ரஜினி காந்த்.