குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் சுமாராகவே விழுகிறது. கடந்த காலங்களில் இதே நாளில் ஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொட்டியது அருவி. ஆனால் இப்போதோ பாறையை ஒட்டிக் கொண்டு வடிந்து களை இழந்து காணப் படுகிறது அருவி.
கேரளத்தில் பருவமழை தொடங்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்ட ஜூன் 8ம் தேதியை அடுத்து, குற்றாலத்தில் சீஸன் தொடங்கிவிட்டதாக கடந்த ஜூன் 9ம் தேதி அறிவித்தார்கள். அதன்படி, மாலை நேரம் குளுகுளுவென காற்றும் சாரல் மழையும் இருந்தது. பின்னர் மெயின் அருவியில் முதல் நீர் விழத் தொடங்கியதை ஆர்வத்துடன் பலரும் போட்டோ, வீடியோ எடுத்து வெளியிட்டார்கள்.
எல்லாம் அடுத்த 3 நாட்கள் தான். பின்னர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை இல்லாமல் இருந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகம் விழவில்லை.. சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து குளிக்கும் மெயின் அருவியில், வழக்கமாக ஆண்கள் போனால் போகிறது என்று தலை காட்டும் பகுதியில் குறைவாக தண்ணீர் விழுகிறது. ஹோவென்ற இரைச்சலுடன் தண்ணீர் விழும் பகுதி காய்ந்து போய்க் கிடக்கிறது.
இதனால் வரிசையில் நின்று ஆண்கள் குளிக்கும் நிலை தொடர்ந்தது. ஆயினும் ஐந்தருவியில் மூன்று அருவிகளில் தண்ணீர் விழுந்தது. அதில் பெண்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இன்று காலை லேசாக சாரல் மழை பெய்தது. மதியத்தில் சில நிமிடங்கள் மழை பெய்தது. மலைப் பகுதியில் மேகமூட்டமாகக் காணப் பட்டது. இதனால் நாளை அருவியில் தண்ணீர் அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர் உள்ளூர் வாசிகள். சனி ஞாயிறு வார விடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்போது சாரலும் ஓரளவு அருவியில் தண்ணீரும் விழும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.