நாத்திக கருணாநிதிக்கு ஆலயமாம்! ஆத்திக பாணியில் பூமி பூஜை! அந்த ரூ.30 லட்சத்தை ஏழைகளின் பசியாற்றியிருக்கலாமே!
சாகும் வரை திமுக., தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் நாத்திகரான மு.கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில் ஒன்று கட்டப் படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆத்திக பாணியில் நேற்று போடப் பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் திமுகவினரால் கடைபிடிக்கப் பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு கிராமத்தில் 10 பேர் தங்கள் நிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். கோயில் கட்டுவதற்காக அவர்கள் ஞாயிறு அன்று பூமி பூஜை செய்தனர்.
கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில், பலர் கலந்துகொண்டனர். அவருக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிக்காடு கிராமத்தில் அருந்ததியர் முன்னேற்றப் பேரவை சார்பில்தான் இந்தக் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்.நல்லதம்பி தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.
குச்சிக்காடு கிராமத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ‘கலைஞர் பகுத்தறிவாலயம்’ என்ற பெயரில் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான நிதி அருந்ததியர் சமூக பிரிவு மக்களிடம் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் கருணாநிதியின் வரலாறு, நூலகம் உள்ளிட்டவை இடம்பெறும்.
தேவை தான் கடவுளை உருவாக்குகிறது. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியை கடவுள் உருவில் காண்கிறோம் என்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவர் கூறினார்.