திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்த வைகோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே இடத்தில் இந்து முன்னணியினர் திரண்டு, காவிக் கொடி காட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் திருப்பூர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரன் கோவில் அருகே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வைகோ நடத்திவரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் உள்ளே நுழைந்ததால் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், திருப்பூருக்கு இன்று வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி! அவர், அரசு நிகழ்ச்சியிலும், பா.ஜ.க. பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றுப் பேசுகிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.35 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில், திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அதே பகுதியில் நடைபெறும் பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.