நெல்லை மாவட்டத்தின் கிராமமான அணைந்தநாடார் பட்டியில் வைக்கப் பட்டுள்ள இந்த பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் ஹிட் அடித்திருக்கிறது.
இந்துவாகப் பிறந்தோம்! இந்துவாகவே வாழ்வோம்! பிற மதத்தினர் ஊருக்குள் பிரசாரம் செய்ய அனுமதியில்லை! இவண் ஊர் பொதுமக்கள் அணைந்தநாடார்பட்டி – என்று எழுதப் பட்ட வாசகங்களுடன் உள்ள பெயர்ப் பலகை இப்போது இணையத்தில் அதிகம் வலம் வருகிறது.
இதே போல் நெல்லை மாவட்டத்தின் சில ஊர்களிலும் பெயர்ப் பலகைகளை வைத்து, வேற்று மதத்தினர் மதப் பிரசாரம் செய்ய ஊருக்குள் அனுமதி இல்லை என்று ஊரில் உள்ள இந்து மக்கள் சார்பில் வைத்திருக்கிறார்கள்.
கடந்த இரு நூற்றாண்டுகளாகவே, குமரி மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திலும் கிறிஸ்துவ இஸ்லாமிய மதப் பிரசாரம், கட்டாய மதமாற்றங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இது பொதுமக்களிடையே அமைதியின்மையைத் தோற்றுவித்து, மத மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, நெல்லை, குமரி மாவட்டத்தில், நாடார் சமூக மக்களிடையே கிறிஸ்துவ மதமாற்றத்தின் தாக்கம் அதிகம் காணப் படுகிறது. அதன் காரணத்தாலேயே இந்து நாடார், கிறிஸ்துவ நாடார் என்று தங்களுக்குள் மதம் மாறிய பின்னும் பிரிவுகளை வைத்துக் கொண்டு, தகராறுகளில் ஈடுபடுவதாகக் கூறப் படுகிறது.
தங்கள் பகுதியில் வந்து மதப் பிரசாரம் செய்து தங்கள் தெய்வங்களை இழிவாகப் பேசுவதும் நோட்டீஸ் அடித்துக் கொடுப்பதுமாக கிறிஸ்துவ மிஷனரிகள் ஈடுபடும்போது பொறுமை இழக்கும் பொதுமக்கள் அவர்களுடன் தகராறில் ஈடுபடுவதும், அதைத் தொடர்ந்து புகார்கள், வழக்குகள் என காவல் நிலையங்களுக்குச் செல்வதுமாக ஆகிவிடுகிறது. அவரவர் போக்கில் அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் இந்துக்களின் வாழ்க்கையை இவ்வாறு சீர்குலைப்பதற்காகவே மத பிரசாரகர்கள் ஊருக்குள் வருவதால் பிரச்னை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது போன்ற செயல்களைத் தவிர்ப்பதற்காகவே வேற்று மதத்தினர் மதப் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை என்று போர்டுகள் வைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்