நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் அருவிகளில் நீர்வரத்து இன்றி பேரருவி, ஐந்தருவி, பழைய அருவி என அனைத்தும் களை இழந்து காட்சி தருகின்றன.
வழக்கமாக மே மாத இறுதியிலேயே சீசனுக்கான அறிகுறிகள் தென்படும். ஜூன் மாத முதல் வாரத்தில் மழை பெய்யத் தொடங்கி, அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். வியாபாரிகள் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடைகளை விரித்து, மகிழ்ச்சியுடன் உலவிக் கொண்டிருப்பார்கள். சுற்றுலா பயணியரும் அருவிகளில் குளித்து, சூடாக மிளகாய் பஜ்ஜி, சுக்கு டீ, வெல்ல கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி, இங்குள்ள விதவிதமான பழங்கள், என வாங்கிச் சென்று உண்டு மகிழ்வார்கள்.
இந்த முறை எல்லாமே டல் தான்! மழை தொடக்கத்தில் இரு நாட்கள் லேசாகத் தலை காட்டியதுடன் சரி… பின்னர் மழை இல்லாமல் இப்போதும் அருகில் உள்ள ஏரி குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
இந்நிலையில் அருவிகளிலும் நீர் இன்மையால் மனிதர்களுடன் சேர்ந்து குற்றாலக் குரங்குகளும் சோக மயமாய் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
குற்றாலம் பேரருவியில், ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக ஓரளவு நீர் விழுகிறது! ஆனால் பெண்கள் பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட பாறையில் இருந்து கசிந்து விழவில்லை! இதனால் பெண்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாளை சனிக்கிழமை, தொடர்ந்து ஞாயிறு என வார இறுதி நாட்களில் பெருமளவில் பயணிகள் வருவர். ஆனால் வார நாட்களிலேயே, குளிக்க வந்தவர்கள் வரிசை கட்டி நின்று.. வெறுப்படைந்தனர். அருவிகளில் நீர் இல்லாவிடினும், கடந்த சில நாட்களாக, ஓரளவு மேகமூட்டமும், சிறிய அளவில் தூறலும் சாரலும், சிலு சிலு காற்றும் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் அடித்து வருகிறது.