தீபாவளியை முன்னிட்டு நாளை பிகில் மற்றும் கைதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த இரு படங்களுக்கும் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றால் டிக்கெட் விலை குறித்த உறுதி அளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு படத்தின் தயாரிப்பு குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமும் அரசிடம் கோரியிருந்தனர். மேலும் அமைச்சரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் திருப்பூர் சுப்பிரமணியன் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், நேற்று திடீரென சிறப்பு காட்சிகள் ரத்து செய்யக் கோரி அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும், முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப் பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என்றும் கடம்பூர் ராஜூ டிவிட்டரில் பதிவிட்டார். இதன்மூலம் சிறப்பு காட்சிகள் இல்லை என்பது உறுதியானது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்காக வன்மம் வைத்துக்கொண்டுதான் தமிழக அரசு, தற்போது பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துகளை அமைச்சர்கள், அ.தி.மு.க-வினர் உள்ளிட்ட பலரும் தெரிவித்து விட்டார்கள். அத்துடன் இந்த விவகாரத்தை முடித்திருக்கலாம். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு ஓர் அரசு, திரைப்படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதுபோன்ற செயல்களால், இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகிவிடும்.
இந்த வெறுப்பினால்தான் தேர்தல்களின்போது ஜனநாயகக் கடமையான வாக்களிக்கப் பலரும் வருவதில்லை. இதற்கு முன்பும் ‘கத்தி’, ‘சர்கார்’ ஆகிய திரைப்படங்களுக்கும் அரசு நெருக்கடி கொடுத்தது. செல்வாக்குப்பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் அதைக்கண்டு அஞ்சி, அவர்களுக்கு எதிராக வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்தப்பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் தம்பி விஜய் அஞ்சக்கூடாது” என்றார்.
“மக்கள் வாக்களிக்காவிட்டால் ராஜேந்திர பாலாஜி எப்படி அமைச்சர் ஆகியிருக்க முடியும்? அமைச்சர் என்பவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவருக்கும் சமமான முறையில் நடக்க வேண்டும். மக்கள், கோரிக்கைகளைக் கூற வந்தபோது கவனமாகப் பேசியிருக்க வேண்டும். அமைச்சர் என்பவர் கண்ணியத்தோடும் கட்டுப்பாட்டோடும் பேச வேண்டும்” என்றவர்,
”ஏழை எளிய மக்களுக்கு எதுவுமே ஏற்புடையதல்ல. வரிவிதிப்பு, நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டது. வரி விதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது, தேசத்துரோகி என்று கூறினார்கள். வாங்கும் திறனற்ற மக்களாக நம்மை மாற்றிவிட்டார்கள். பண்டிகை நாள்களில் 200 விழுக்காடு பொருள்கள் விற்பனையாகும் நிலை இருந்தது. தற்போது 80 விழுக்காடுதான் விற்பனையாகிறது.
அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு மக்களைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. பெரும் முதலாளிகளின் நலன் கருதியே இவர்கள் செயல்படுவார்கள். ஆகவே கோதுமை,பார்லி விலை உயர்வைப் பற்றி நாமெல்லாம் சிந்திக்கவே முடியாது” என்றார்
சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது.
— Kadambur Raju (@Kadamburrajuofl) October 23, 2019
முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும். #TNGovt