சென்னை:
நடிகர் கமல்ஹாசன் இப்போது மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சி அமைப்பைத் துவங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் டிவிட்டர் பதிவுகளில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். அப்போதெல்லாம் அவர் சர்ச்சைகளுக்கு ஆளானார்.
குறிப்பாக, சமூகத்தைப் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு அரசியல் களத்தில் குதித்த கமலுக்கு, தனிப்பட்ட வாழ்க்கை சரியாக இல்லை என்று கருத்துகள் எழுப்பப் பட்டன. மனைவிகளுடன் சரியாக வாழத் தெரியாதவர் மக்களை எப்படி கவனிப்பார் என்று விமர்சனம் முன்வைக்கப் பட்டது. இதை நாசூக்காக வெளிப்படுத்தினார் மூத்த நடிகரும் இயக்குனருமான விசு. தனிமைப் பட்டுப் போனதால் கமல்ஹாசனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது செய்யட்டும் என்று அரசல் புரசல் கருத்தைத் தெரிவித்தார்.
இதற்குக் காரணம், கமலுடன் அண்மைக் காலம் வரை உடன் இருந்து பிரிந்து சென்ற நடிகை கௌதமி, அவர் மீது சில குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். தாங்கள் ஏன் கமல்ஹாசனைப் பிரிகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, தனது மகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருதி ஒரு முடிவு எடுத்ததாகச் சொன்னார். கௌதமியின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், கமல்ஹாசனின் கட்சி குறித்தும் அவரது அரசியல் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மகள் பாதுகாப்பு கருதி, கமலிடம் இருந்து பிரிந்ததாக கௌதமி கூறியதில் பல அர்த்தங்கள் உள்ளன” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் என்ன என்பது குறித்து ஜெயக்குமார் மேலும் விளக்கவில்லை.