தேனி:
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் நேற்று பற்றிய திடீர் காட்டுத் தீயில் சிக்கிய 27 பேர் மீட்கப் பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர் என சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. மலையேற்றம் சென்ற 8 பேர் உயிரிழந்ததாகவும் அதில் 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் காட்டுத்தீயில் இருந்து மீட்கப்பட்ட ஈரோட்டை சேர்ந்த சிறுமி நேகா (9) பெற்றோருடன் அனுப்பிவைக்கப்பட்டார். தீவிபத்தில் காயமடைந்த ஸ்வேதா தேனியில் இருந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டுள்ளார். தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இலக்கியா, சபிதா, சுவேதா, கண்ணன் ஆகியோர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 99 சதவீதம் தீக்காயங்களுடன் உள்ள அனுவித்யா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டார்.
தீவிபத்தில் காயமடைந்த திருப்பூரை சேர்ந்த சத்திகலாவின் மகள்கள் சாதனா, பாவனா ஆகியோரை, வீட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் மறுத்துள்ளனர். சிறுமிகளின் தந்தை வெளிநாட்டில் இருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அனுப்ப அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. மேலும், காட்டுத் தீயில் சிக்கி மீட்கப்பட்ட 28 பேரில் 10 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,
இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 5 பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தீவிபத்தில் 5 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவலாக, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி விடியவிடிய நடைபெற்றது. காட்டுத் தீயில் சிக்கிய 36 பேரில், இதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர், இவர்களில் 4 பேருக்கு 40% முதல் 95% வரை தீக்காயம். ஏற்பட்டுள்ளது என்றும், காட்டுத்தீயில் சிக்கிய மேலும் 4 பேர் கேரளாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மீட்புப் பணியில் உதவிட குரங்கணிக்கு விரைந்தது கேரள காவல்துறை.
இடுக்கி டி.எஸ்.பி தலைமையில் காவலர் குழுவினர் குடிநீர், மருந்துகள், உதவிப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக மீட்புப் பணியில் பங்கேற்க விரைந்தனர். கோவை சூலூரில் இருந்து புறப்பட்ட 16 கமாண்டோக்கள் கொண்ட குழுவினர் தேனி மாவட்டத்தை அடைந்து குரங்கணியை நோக்கிச் சென்றனர்.
சென்னை ஐடி ஊழியர்கள் மற்றும் திருப்பூரை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், இந்தத் தீ விபத்தில் சிக்கியவர்கள் எத்தனை பேர் என்ற சரியான தகவல்கள் எதுவும் இதுவரை அரசு தரப்பில் தெரிவிக்கப் படவில்லை. காட்டுத்தீ பற்றிய இடம் தமிழக-கேரள எல்லை பகுதி என்பதால் கேரள மாநில காவல்துறையினரும், அரசு நிர்வாகமும் களத்தில் இறங்கியுள்ளது. இதனிடையே, மத்திய அரசின் உதவியும் தமிழக அரசின் துரித நடவடிக்கைகளும் ஆறுதல் அளிப்பதாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயினும், தீக்காயங்களுக்கான உயர் தர மருத்துவ சிகிச்சை வசதிகள்
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இல்லை என்பது வேதனை.
#வேதனை #தீ #சிவகாசி #குரங்கணி #தேனி #பட்டாசு #காட்டுத்தீ