தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சோனியா தலைமையில் 2018 டிச.10 ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுவது குறித்தும் பாஜக.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.
முக்கியமாக அந்தக் கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப் படவில்லை. பேசப்படவும் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் குறித்துப் பேசலாம், அப்போது தேர்வு செய்து கொள்ளலாம் என வட மாநில கட்சிகளின் தலைவர்கள் கூறி விட்டனர். எனவே, கூட்டணிப் பேச்சு ஒத்துவர வேண்டும் என்பதற்காக, அப்போதைக்கு ஏமாற்றத்தை முகத்தில் கொண்டு, ராகுல் உள்ளிட்டவர்கள் பேசாமல் அமைதி காத்தனராம்.
ஆனால், ராகுல் பிரதமர் வேட்பாளர் என்று ஏதாவது ஒரு நிலையில் அறிவித்து விட வேண்டும் என்ற எண்ணமோ என்னவோ… டிச.16 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்க சோனியா மட்டுமே வருவதாக இருந்தது, கடைசி நேரத்தில் மாற்றம் பெற்று, கூடவே ராகுலும் ஒட்டிக் கொள்ளும் படி ஆனது.
அப்போது அழையா விருந்தாளியாக அழைப்பிதழில் பெயர் இல்லாமலேயே ஏன் திடீரென ராகுல் வருகிறார் என்று எல்லோரும் கேட்டார்கள். அதற்கான விடை, ராயப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த போது தெரிந்தது.
இந்த முன்மொழிதல் விஷயம், தேசிய அளவில் எதிர் வினையை ஏற்படுத்தியது. அதுவரை காங்கிரஸுடன் கூட்டணி சேர விரும்பிய கட்சிகள் கூட இந்த அறிவிப்பால் பின்வாங்கின. உத்திரப் பிரதேசம் முதலில் ஆட்டம் கண்டது. மாயாவதியும் அகிலேஷும் கை கோத்தார்கள். மம்தா தனி புராணம் பாட ஆரம்பித்தார். சரத் பவாரும் தன் பங்குக்கு யோசிக்க ஆரம்பித்தார். கர்நாடக தேவேகவுட, தலையைக் கவிழ்ந்தார். எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் மு.க.ஸ்டாலின்! மம்தா, மாயாவதி, அகிலேஷ் என ஒவ்வொருவரும் பிரதமர் நாற்காலியைக் குறிவைத்திருக்க… ஸ்டாலின் போட்ட கணக்கு தவறுதலாகிவிட்டது.
இந்நிலையில் தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை கோல்கட்டாவில் நடைபெறுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ராகுல் மறுத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் கோல்கட்டா செல்கிறார். நாளை நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
மற்ற் மாநிலக் கட்சிகள் எதிர்த்த போதிலும் காங்கிரஸில் தனக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று எண்ணுகிறார் ஸ்டாலின்!
மம்தா கூட்டியுள்ள இந்தக் கூட்டத்தில் பாஜக.,வுக்கு எதிரான தேர்தல் வியூகம் காங்கிரஸ் தலைமையிலானதுதானா என்பது சந்தேகமே. காரணம், மம்தாவுக்கு என தனி தேர்தல் வியூகம் உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநிலக் கட்சிகளின் கூட்டணியே முன்பு போல், ஆட்சிக்குத் தலைமை ஏற்பதா என்பதை தீர்மானிக்கலாம் என மம்தா யோசிக்கிறார். அதை வலியுறுத்தவே அவர் கோல்கட்டாவில் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
ஆனால், அடுத்த பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று கூறியுள்ள ஸ்டாலின், மம்தா பானர்ஜியின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது ஒரு கேலிக்கூத்துதான்!
இந்நிலையில், மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்திற்கு தான் செல்லாவிட்டாலும், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக மம்தாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் உண்மையான தேசப்பற்று மற்றும் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. ஜனநாயகத்தின் தூண்கள், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையை எதிர்க்கட்சிகள் தான் பாதுகாக்க முடியும். பாஜக மற்றும் மோடியின் கொள்கை, அழிக்கும் நோக்கம் கொண்டவை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் மம்தாவிற்கு எனது ஆதரவை தெரிவிப்பதுடன், இது ஒருங்கிணைந்தத இந்தியாவிற்கு ஒரு செய்தியை அனுப்பும் என்று எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.