சென்னை: கிலோ கணக்கில் கஞ்சாவை ஆட்டோவில் ஏற்றி கொண்டு போயிருந்த சசிகலா என்ற கஞ்சா ராணி உள்பட 4 பேரை கவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்தனர்.
எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் 3 பெண்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தேனிக்கு பஸ் மூலம் கஞ்சா கடத்த போவதாகவும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு காவல்துற்யினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனால் அந்த பெண்களை காவல்துறையினர் கண்காணித்தனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை காவல்துறையினர் பின் தொடர்ந்து விரட்டிசென்று பிடித்தனர்.
அவர்களது பையை சோதனை செய்ததில், மொத்தம் 46 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில் முக்கியமானவர் சசிகலா என்பதும், அவருக்கு உடந்தையாக, பாத்திமா, கணேசன், பாண்டீஸ்வரி ஆகியோர் தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதில், பாத்திமாவை தவிர மற்ற அனைவருமே தேனியை சேர்ந்தவர்களாம்.
வழக்கமாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம்தான் கஞ்சா கடத்தி வரப்படும் என்றும், அதனை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து தேனிக்கு கொண்டு சென்று விற்பதாகவும் இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.