துபாயில் நடந்த லாட்டரி குலுக்கலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் 12 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.24.5 கோடி) வென்றது, அவரை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் தீபன்கர் டே, 37. இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபாயில் பரபரப்பாக விற்பனையாகும், ‘மெகா பிக் டிக்கெட்’ என்ற லாட்டரி வாங்கினார்.
நேற்று நடந்த குலுக்கலில் அவருக்கு, முதல் பரிசாக, 24.51 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து தீபன்கர் டே கூறுகையில், ‘துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில், கண் பார்வை பரிசோதகராக, 9,000 டாலர் வரை சம்பாதிக்கிறேன்.
தற்போது கொரோனாவால் பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். இப்படியான சூழலில் எனக்கு இந்த பரிசு கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பணத்தை, என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என, 11 பேருடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
மேலும், இந்த பரிசுத்தொகையில் என் மகளிற்கு சிறந்த கல்வியை அமைத்துத்தரவுள்ளேன்’ என்றார்.மேலும், ‘எனது மனைவியும் மகளும் சில மாதங்களுக்கு முன், இந்தியாவுக்குச் சென்றனர்.
கொரோனாவால் அவர்களால் இங்கு வர முடியவில்லை. எனது இந்த மகிழ்ச்சியை அவர்களுடன் கொண்டாட முடியவில்லை என்பதே எனது தற்போதைய வருத்தமாக இருக்கிறது’ என, தீபன்கர் டே தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.