ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி மஞ்சள் பொடி தூவி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் ஆவணி மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி மஞ்சள் பொடி தூவி வழிபட்டு செல்வர்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருந்ததால் ஆவணி மாத முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். செப். 13 ஆம் தேதி கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.
கோயில் வாசலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கைகளை சுத்தப்படுத்துவதற்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. அதன் பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பொது முடக்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நாகராஜரை வழிபட்டனர்.
நாகர் சிலைகளுக்கு பால் ஊற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நாகர் சிலைகள் இருந்த பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பால் மற்றும் மஞ்சள் பொடி கொண்டு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.