இது உண்மையிலே மகா சோகமான காலம், எல்லோரும் யாரையாவது பறிகொடுத்து அழுது கொண்டே இருக்க வேண்டும் எனும் கொடுங்காலம்!
அப்படி இந்தியாவின் பெருமை வாய்ந்த அடையாளமும், இந்தியப் புலனாய்வு ஸ்ட்கார்ட்லாண்டு யார்டை விட திறமையானது என்பதை நிரூபித்தவருமான முன்னாள் சி.பி,ஐ அதிகாரி ரகோத்தமன் இப்பொழுது நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்
இந்த தேசத்துக்கு ராணுவ தளபதியாக கரியப்பா, மானக்சா போன்றோர் ஆற்றிய சேவை போல, விஞ்ஞானியாக கலாமும் ஆர்.சிதம்பரமும் செய்த சேவை போல மகா பிரசித்தியானது ரகோத்தமனின் சேவை!
ஆம் ராஜிவ் கொலையின் மர்மத்தை உடைத்து இந்த தேசம் சூழ்ந்த பெரும் ஆபத்தைக் களைந்து, தமிழகமும் இலங்கையும் புலி பயங்கரவாதத்தில் இருந்து விடுபடக் காரணமே அவர்தான்!
ராஜிவ் கொலை என்பது உலக புலனாய்வுக்கே விடப்பட்ட சவால், அதுவும் முதன் முதலாக மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முதல் தலைவர் ராஜிவ் காந்தி!
கென்னடி கொலை போல இன்னும் பல மர்மக் கொலைகள் போலத் தான் ராஜிவ் கொலை பற்றியும் ஒரு மர்மமும் உடைபடாமல் இருந்தது! ராஜிவைக் குறிவைத்து புலிகள் பல பேட்டிகள் அளித்திருந்ததாலும் இன்னும் தமிழக நிலைப்பாடுகள் பத்மநாபா கொலை உள்ளிட்ட கொடூரங்கள் படியும் புலிகள் மேல் ஒரு சந்தேகம் இருந்தாலும் ஆதாரம் அப்போது ஏதுமில்லை!
லண்டனில் இருந்து புலிகளின் செயல் தலைவன் கிட்டு “முடிந்தால் கொலைகாரர்களை இந்தியா கண்டுபிடிக்கட்டும்” என எள்ளி நகையாடிய காலம் அது! அந்நேரம் பொறுப்பு ரகோத்தமனிடம் ஒப்படைக்கபட்டது! அதாவது புலனாய்வு இவருடையது இதுபோன்ற பல பிரிவுகளின் தலைவராக கார்த்திகேயன் இருந்தார்!
ரகோத்தமனின் விசாரணையே அதாவது அவரின் முதல் கோணமே அசத்தலாக இருந்தது. “குண்டுவெடிப்பில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பெண்ணின் உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை, அப்பெண் தமிழ்ப்பெண் வடிவில் இருக்கின்றாள், அவளின் கை கால் தொடையெல்லாம் ஒரு ராணுவப் பயிற்சியின் அடையாளம்” என முதன் முதலில் மர்மம் அவிழ்க்கத் தொடங்கியது அவர்தான்~!
அதைத் தொடர்ந்தே ஹரிபாபு வீட்டில் அவர் நடத்திய சோதனையும், அவனுக்கும் சிவராசனுக்கும் இருந்த தொடர்பும் இன்னும் பலவும் வெளிவந்தன! அந்நேரம் திருப்பதியில் திருமணம் முடிந்து சென்னை வந்த முருகன் நளினியைக் கைது செய்தவரும் இவரே! அதன் பின்பே மர்மங்கள் விலக ஆரம்பித்தன!
இதற்காக அவர் பட்ட பாடுகள் மறக்க முடியாது, எவ்வளவோ ஆதாரங்கள் எவ்வளவோ கைதுகள், எவ்வளவோ விசாரணைகள் என தூக்கம் தொலைத்தார்… குறிப்பாக புலிகளின் உளவுத் தகவல் வயர்லெஸ் செய்திகளின் ரகசிய குறியீடுகள் என்பது சாமான்யம் அல்ல, அதை திணறித் திணறிப் படித்து கற்று அதை எளிதாக உடைத்து செய்திகளை படித்தவர் அவரே!!
அது சாட்சியுமாயிற்று! சிவராசன் முந்திக்கொண்டு இவரை பூந்தமல்லி அலுவலகத்தோடு கொல்லும் வெறியில் இருந்ததை அவர் அறிந்துகொண்டே அவனைத் தேடினார்! மிக மிக உன்னதமான தியாகம் அது! ராணுவ சேவை அது!
எவ்வளவோ இடங்களில் துப்பாக்கிச் சூடு! அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல! அரசியல், துப்பாக்கி மிரட்டல் என எவ்வளவோ எதிர்ப்புகளை தாண்டித்தான் வழக்கை முடித்து உரிய ஆதாரங்களோடு புலிகளைக் கைகாட்டினார்!
தமிழகத்தில் மட்டும் சுமார் 30 புலிகள் சயனைடு கடித்து தற்கொலை செய்வதும், அதுவும் தன் ஆதாரங்களை அழிப்பதுமாய் இருந்த கொடிய காலம் அவை! அதையெல்லாம் கடந்து, உயிருக்கு அஞ்சாமல் தேடி, பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி பின் பாய்ந்து அவர் பட்ட சிரமம் கொஞ்சநஞ்சமல்ல!
சிவராசனை நெருங்கியவரும் அவரே, அவனை உயிரோடு பிடிக்க முழு முயற்சி எடுத்தவரும் அவரே! (ராஜிவ் கொலையினை இவர் விசாரிக்கும் பொழுதுதான் பத்மநாபா கொலையினைச் செய்தவன் சிவராசன், இன்னும் பல மர்மக் கொலை குறிப்பாக தமிழக காவலர்களையே அவன் தீர்த்து கட்டிய கதையெல்லாம் தெரிய வந்தது)
சுமார் 3 ஆயிரம் ஆதாரங்கள் அவரால் கொடுக்கப்பட்டிருந்தன.
புலிகள் மிக நுட்பமாக அந்தக் கொலையினைச் செய்திருந்தனர், சிக்கிவிடவே கூடாது சிக்கினாலும் மொத்த காங்கிரசும் சேர்ந்து ராஜிவைக் கொன்றது போல் குழப்பிவிட வேண்டும் எனும் வலை அது! அதில் வெட்ட வேண்டியதை வெட்டி மிக சரியான ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நின்றார்!
அவர் மிகுந்த கவனத்தோடு உரிய ஆதாரத்தோடு தயாரித்த அந்த அறிக்கைதான் பின்னாளில் புலிகளுக்கு சாவுமணி அடித்தது, அவ்வளவு ஆதாரங்களோடு அதை தயாரித்தார்! அதன் பின்னால் இருந்த உழைப்பு அபாரமானது, ஒருவகையில் புலிகளின் அழிவு இவரால்தான் தொடங்கி வைக்கப்பட்டிருந்தது!
அவர் மட்டும் அந்த வழக்கை சொதப்பியிருந்தால் நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரங்கள் அரங்கேறியிருக்கும், இன்றுவரை புலிகள் அழிந்திருக்க மாட்டார்கள்!
தமிழ்நாட்டின் தலைவிதி அவர்களால் முடிவு செய்யபட்டிருக்கும், ராஜிவ் பாணியில் எவ்வளவோ கொலையும் அழிவுகளும் அரங்கேறி காஷ்மீர் போல் பஞ்சாப் போல் வங்கம் போல் தமிழகம் சுடுகாடாயிருக்கும்!
அதனை தவிர்த்து தமிழகத்தை காத்து இங்கு அமைதி நிலைபெற வழிசெய்தவர் ரகோத்தமன். இந்நாட்டின் மிகப் பெரிய திறமையான பிம்பங்களிலும், மாபெரும் ஆற்றல் வாய்ந்தவர் வரிசையிலும் அவருக்கு எக்காலமும் இடம் உண்டு. பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டிய அளவு பெரிது.
அவரின் சேவை இலங்கையில் புலிகளால் கொல்லப் பட்ட இந்திய ராணுவத்தினருக்கும், ராஜிவோடு கொல்லப்பட்ட 17 பேரின் ஆன்மாவுக்குமான நீதி அவராலேதான் கொடுக்கப்பட்டது! புலி எனும் அரக்கன் இங்கு பேயாட்டம் ஆடக் கிளம்பியபோது அதை அடித்து விரட்ட கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் ரகோத்தமன்!
திருபெரும்புதூரில் இருக்கும் ராஜிவ் நினைவிடம் அருகே அவருக்கு ஒரு சிலை வைத்து அந்த மாபெரும் மதியாளரை எக்காலமும் இத்தேசம் நினைவு கூரல் வேண்டும்! அவர் எக்காலமும் புலனாய்வு உலகில் ஒரு பாடமாகவும் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே வழிகாட்டியாகவும் நிற்பார்!
அவர் ராஜிவ் கொலை வழக்கு பற்றி எழுதிய அந்தப் புத்தகம் எக்காலமும் இந்திய புலனாய்வு புத்தகங்களில் முதலிடத்தில் இருக்கும்! இந்நாட்டினை புலி பயங்கரவாதியிடம் இருந்து காத்து நின்ற அந்த இந்தியனுக்கு வீரவணக்கம்!
(ஆனால் ஒரே ஒரு நெருடல் எக்காலமும் உண்டு — புலிகள் திமுக, திக ஆதரவில்தான் அக்கொலையினை செய்திருந்தனர், ரகோத்தமனும் பல திமுக., திக., தலைகளைக் குறி வைத்திருந்தார்! திமுக., திக., எல்லாம் தடை செய்யப்படும் அளவுக்கு ஆதாரம் அவரிடம் இருந்தது! ஆனால் தில்லி தலைமை திக., திமுக.,வினை விடுவித்துவிடச் சொன்னது, அதை இவரால் மீற முடியவில்லை! ஏன் சொன்னது என்றால் அதுதான் காங்கிரஸ்~ திமுக திராவிட கள்ளக் கூட்டணி, இன்றும் 7 பேரையும் விடுவிக்கச் சொல்லும் அதே கூட்டணி)
- கட்டுரை: ஸ்டான்லி ராஜன் (சமூகத் தளத்தில் எழுதியதில் இருந்து…)